Ad Widget

யாழ் போதனாவில் தண்ணீரில் கிருமித்தொற்று!! 400 பேர் வரை பாதிப்பு!!

யாழ்.போதனா வைத்தியசாலையின் தண்ணீரில் கிருமித்தொற்று இதனால் சுமார் 400 பேர்வரை பாதிப்படைந்துள்ளனர்.

குறித்த சம்பவம் சீர்செய்யப்பட்டுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் இடம் பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

யாழ் போதனா வைத்தியசாலையில் தேங்கும் கழிவு நீர் சுத்திகரிக்கப்பட்டு பண்ணைக்கடலில் செலுத்தப்பட்டு வருகின்றது. இது கடந்த இருபது வருடங்களாக செயற்பட்டு வரும் நடைமுறையாகும்.

இந்தச் செயல் முறையில் ஏற்பட்ட தொழிநுட்ப தடங்கல் காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக முறையாக செய்யப்படவில்லை. இதனால் பண்ணையிலுள்ள சுத்திகரிக்கப்படுகின்ற இடத்தில் கழிவு நீரானது வீதிகளில் வடிந்து பொதுமக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியது.

இது தொடர்பில் போதனா வைத்தியசாலையின் நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து நிர்வாகத்தினர் அதனை சீராக்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

சிராக்கல் நடவடிக்கையின் போது கழிவு தொட்டிக்குள் இறங்கி செயற்படவேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் போதனா வைத்தியசாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் சில மணித்தியாலங்கள் இடைநிறுத்தப்பட்டன. இதனால் யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள கழிவு நீர் அதிகரித்தது.

அதேநேரம் யாழ். போதனா வைத்தியசாலையில் குடிநீருக்காகவும் கைழுவுவதற்காகவும் இருவிதமாக நீரை பெற்றுக்கொள்கின்றோம். திருநெல்வேலியில் இருந்து வருகின்ற நீர் மற்றையது யாழ் போதனா வைத்தியசாலையிலுள்ள மூன்று கிணறுகளில் இருந்து பெறப்படுகின்ற நீர் இவற்றினையே பயன்படுத்தி வருகின்றோம்.

குறித்த நீருக்கு குளோரின் இட்டு சுத்திகரிக்கும் நடவடிக்கைகளும் நாளாந்தம் இடம்பெற்றுவருவது வழமை கழிவு நீர் தடை ஏற்பட்டமையினால் சடுதியாக நிலமட்டத்த்தில் கழிவு நீரின் தன்மை அதிகரித்தமையினால் யாழ் போதனா வைத்தியசாலையில் பயன்படுத்தப்படும் நீர் நிலைகளில் கழிவுநீர்த்தாக்கம் ஏற்பட்டு கிருமிகள் சென்றுள்ளன.

இதன் வெளிப்பாடாக யாழ்போதனா வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற வைத்தியர்கள் தாதிய உத்தியோகஸ்தர்கள் அலுவலக உத்தியோத்தர்கள் சத்திரசிகிச்சைப்பிரிவில் சேவையாற்றுபவர்கள் விடுதியில்வேலை செய்பவர்கள் வயிற்றோட்ட நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இது தொடர்பில் உடனடியாக குடிநீரினை பரிசோதனைக்கு அனுப்பியதுடன் குளோரின் இட்டு கிருமித்தொற்றுக்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தோம். இந்தப் பிரச்சினையால் குறிப்பாக குறித்த தண்ணீர் உட்கொண்டமையினாலும் கைகளை கழுவியமையினாலும் கிருமித்தொற்று எற்பட்டது.

இதன் காரணமாக சுமார் 400 பேருக்கு மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள் வைத்திய அறிவுள்ளமையினால் தாமாகவே சிகிச்சை எடுத்துள்ளார்கள். இதில் 50 பேரளவில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுள்ளார்கள்.

இந்தச் சம்பவமானது தற்காலிகமாக ஏற்பட்ட விபத்து நிர்வாகம் விழிப்பாக இருப்பதால் இதனை சீர் செய்துள்ளோம். மக்கள் அச்சமடையத் தேவையில்லை. என்றார்.

Related Posts