”யாழ் பொருளாதார மத்திய நிலையம் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதல் மீண்டும் இயங்க ஆரம்பிக்கும்” என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
யாழ் பொருளாதார மத்திய நிலையம் தொடர்பாக நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடவின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது வடக்கில் இயங்காத நிலையில் உள்ள அனைத்து தொழில்துறைகளும் மீள ஆரம்பிக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளதாவது” யாழ் பொருளாதார மத்திய நிலையத்தின் அமைவிடம் தொடர்பில் எமக்கு பிரச்சினை உள்ளது. எனினும், பெருமளவு செலவில் அது நிர்மாணிக்கப்பட்டுவிட்டது. இது மக்களின் பணம் என்பதால் அதனை எவ்வாறு நன்மைக்காக பயன்படுத்துவது என்பதே எமது நோக்கமாகும்” இவ்வாறு குறிப்பிட்டார்.
அத்துடன் ” இவ்விடயத்தில் வியாபாரிகள் உட்பட அனைத்து தரப்பினதும் கருத்துகளை உள்வாங்கி, ஓகஸ்ட் மாதம் முதல் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ். மட்டுவிலில் நிர்மாணிக்கப்பட்ட விசேட பொருளாதார மத்திய நிலையம் கடந்த 2022 மார்ச் மாதம் திறந்து வைக்கப்பட்டது. நிர்மாணப் பணிகளுக்கென 200 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டிருந்தது.
எனினும், பொருளாதார மத்திய நிலையத்தின் செயற்பாடுகள் முறையாக முன்னெடுக்கப்படவில்லை. தற்போது அந்நிலையம் முடங்கி, பறவைகளின் கூடாரமாக மாறியுள்ளது.
இந்நிலையில் மக்களின் கோரிக்கையின் பிரகாரம் பொருளாதார மத்திய நிலையத்தை மீள ஆரம்பிப்பதற்குரிய முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.