யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுத்தனர்.

இந்த கவனயீர்ப்பு போராட்டம் தொடர்பாக மாணவர்கள் தெரிவித்துள்ளதாவது, “தற்போதைய அரசாங்கம் எதிர்வரும் மார்ச் மாதத்திலிருந்து நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழக கல்லூரிகளையும் மூடுவதற்கு முஸ்தீபு எடுத்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் குறித்த செயற்பாட்டுக்கு எதிராக நாடளாவிய ரீதியில் அனைத்து பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனவே நாமும் குறித்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்.
அத்துடன் பல்கலைக்கழகம் தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள முடிவினை உடனடியாக மீள பெற்றுக்கொள்ள வேண்டும்.
இதேவேளை நாட்டிலுள்ள ஏனைய பல்கலைக்கழக கல்லூரிகளில் சீருடைகள் கட்டாயப்படுத்தப்படாத நிலையில் யாழ்ப்பாணத்தில் இயங்கும் பல்கலைக்கழக கல்லூரியில் மட்டும் சீருடையை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளமைக்கும் எதிர்ப்பை வெளியிடுகின்றோம்” என தெரிவித்துள்ளனர்.