Ad Widget

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை: சந்தேகநபர்களின் பிணை கோரிக்கை நிராகரிப்பு

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸ் அதிகாரிகளின் பிணை மனு கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறித்த ஐந்து பொலிஸ் அதிகாரிகளும் நேற்று (வியாழக்கிழமை) யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த படுகொலை தொடர்பான புலன்விசாரணைகள் நிறைவு பெறாத நிலையிலும், துப்பாக்கிகள் தொடர்பான இரசாயன பகுப்பாய்வு அறிக்கை கிடைக்க பெறாத நிலையிலும் சந்தேகநபர்களை பிணையில் செல்ல அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இந்த விசாரணையில் அவசியமற்ற வகையில் மேல் நீதிமன்றம் தலையிடாது என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து சந்தேகநபர்களின் மனைவிமார் மற்றும் உறவினர்கள் மூலம் தாக்கல் செய்யப்பட்ட பிணை கோரிக்கை தொடர்பான விசாரணை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு, ஒக்டோபர் 19ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது, அவர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts