Ad Widget

யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு மிரட்டல்

அரச புலனாய்வு பிரிவுனர் என அடையாளம் காட்டிக்கொண்ட நால்வரால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நேற்றிரவு 1௦.௦௦ மணியளவில் அச்சுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, தாம் ஊரெழு இராணுவமுகாமை சேர்ந்த அரச புலனாய்வு பிரிவினர் எனக் கூறி யாழ், பேருந்து நிலையத்தில் வைத்து இரண்டாம் வருட மாணவன் ஒருவரை கைது செய்த இவர்கள் பல்கலைக்கழகம் முன்பாக கொண்டு சென்று தாக்கியுள்ளனர்.

அதன் பின்னர் மூன்றாம் வருட மாணவன் ஒருவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பினை மேற்கொண்ட புலனாய்வாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தியோர், உமது நண்பர் ஒருவரை நாம்கைது செய்துள்ளோம். உடனடியாகப் பல்கலைக்கழகத்துக்கு வருமாறும், அவ்வாறு வந்தால்தான் நண்பனை விடுதலை செய்வோமெனவும் அச்சுறுத்தியுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து புலனாய்வாளர்களால் அழைக்கப்பட்ட மூன்றாம் வருட மாணவன் தனது பல்கலைக்கழக நண்பர்களுடன் அங்கு சென்றுள்ளான். அப்போது அங்கு புலானய்வுத் துறையினர் இவர்களைத் தாக்க முற்ப்பட்டனர்.

இந்தநிலையில் குறித்த மாணவர்கள் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு சம்பவம் தொடர்பில் தெரியப்படுத்தியதுடன், புலனாய்வு துறையினரில் ஒருவர் வங்கி ஒன்றில் கடமை புரியும் ஊழியர் எனவும் அடையாளம் கண்டு அவரின் பெயரை தெரியப்படுத்தியிருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு இராணுவத்தினரும், பொலிசாரும் வந்ததும் இவர்கள் NP.WF.7043 என்ற இலக்க மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பிசென்றுள்ளனர்.

இதனையடுத்து நள்ளிரவு 12.3௦ மணியளவில் தாம் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாட்டினைப் பதிவு செய்துள்ளதாகக் குறித்த மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸ் நிலையத்திற்கு தொடர்புகொண்டு கேட்டபோது விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.

Related Posts