Ad Widget

யாழ் பல்கலைகழக மாணவர்கள் இருவருக்கு விளக்கமறியல்

யாழ்ப்பாண பல்கலைகழக 1ஆம் வருட மாணவனை அடித்து துன்புறுத்திய இரு மாணவர்களை, எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார், திங்கட்கிழமை (09) உத்தரவிட்டார்.

துன்புறுத்தலுக்கு உள்ளான 21 வயதுடைய மாணவன், யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த மாணவனை 3 ஆம் வருட மாணவர்கள், சனிக்கிழமை (07) கடுமையாக தாக்கியுள்ளனர்.

கடும் காயங்களுக்கு உள்ளாகி மயக்கமடைந்த மாணவனை சகமாணவர்கள், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இதனையடுத்து வைத்தியசாலை பொலிஸார், கோப்பாய் பொலிஸாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து கோப்பாய் பொலிஸார், தாக்குதல் மேற்கொண்ட மாணவர்கள் இருவரை ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்தனர்.

கைதான இருவரையும், திங்கட்கிழமை (09) யாழ்ப்பாணம் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, வழக்கினை விசாரித்த நீதவான் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Related Posts