Ad Widget

யாழ். நகரில் கடலட்டைத் தொழிலை தடுக்க வலியுறுத்தி பேரணி!!

வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் வெளிமாவட்ட மீனவர்களின் அத்துமீறிய கடலட்டை மீன்பிடித் தொழிலை நிறுத்த வலியுறுத்தி வடமராட்சி கிழக்கு மீனவர்கள் யாழ்.மாவட்டத்தில் பேரணி ஒன்றை முன்னெடுத்து அரச அலுவலகங்களையும் முற்றுகையிட்டனர்.

வடமராட்சி கிழக்கு மருதன்கேணி பகுதியில்,தென்னிலங்கை மீனவர்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலக கடலட்டை தொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக உள்ளூர் மீனவர்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்களின் தொடர்ச்சியாக இன்று இந்தப் போராட்டம் இடம்பெற்றது.

யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுசங்க சமாசங்களின் சம்மேளனம் வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் ஆகியன இணைந்து இந்த ஆர்பப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.

தமது பகுதிகளில் அத்துமீறி கடலட்டை தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் மீது கடற்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகள் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தவேண்டும் என்பது இவர்களின் கோரிக்கையாக உள்ளது.

யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள யாழ் மாவட்ட கடற்தொழிலாளர் சங்கத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் ஆரம்பமாகி, யாழ் மாவட்ட செயலகம் வரை பேரணியாக சென்று மாவட்ட செயலகத்தை முற்றுகையிட்டதுடன் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை யாழ் மாவட்ட அரச அதிபரிடம் போராட்டக்காரர்கள் கையளித்தனர்.

அதைத்தொடர்ந்து வடமாகாண ஆளநர் செயலகத்துக்கும் சென்ற போராட்டக்காரர்கள் வடமாகாண ஆளுநர் ஊடாக ஜனாதிபதிக்கான தமது மனுவை ஆளுநரின் உதவி செயலாளர் ஏ.செல்வநாயகத்திடம் கையளித்தனர்.

மேலும் யாழ் பண்ணையிலுள்ள கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களத்திற்கு சென்ற போராட்டக்காரர்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டதுடன் மாவட்ட கடற்தொழில் பணிப்பாளர் சுதாகரிடம் மனு ஒன்றையும் கையளித்தனர்.

Related Posts