Ad Widget

யாழ் ஊடகங்களை “மாபியா” என திட்டிய வித்தியாதரன்

முன்னாள் போராளிகளின் (ஜனநாயகப் போராளிகள் அமைப்பின்) தலமை வேட்பாளரும், முன்னாள் ஊடகவியலாளருமான (அண்மையில் ஊடகவியலாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளித்த போது நான் இப்போ ஊடகவியலாளன் அல்ல என கூறினார்) ந. வித்தியாதரன் யாழ் ஊடகங்களை மாபியா என குறிப்பிட்டு உள்ளதுடன் உதயன் பத்திரிகை மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

கொழும்பில் இருந்து வெளியாகும் டெய்லி எவ்.ரீ பத்திரிகைக்கு வழங்கிய நீண்ட செவ்வியின் இறுதிக் கேள்வியான முன்னாள் தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் எவ்வாறான சவால்களை தற்போது எதிர்நோக்குகின்றனர்? என்பதற்கு பதிலளித்த ந.வித்தியாதரன்… தனது செவ்வியில் இவ்வாறு குறிப்பிடுகிறார்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமக்கு தற்போது ஆதரவளிப்பதில்லை. நாங்கள் தனியாகவே நீந்த வேண்டியுள்ளது. போதியளவு வாக்குகளைப் பெற்றுக்கொள்வது கூட எமது பிரதான சவாலாக கருதப்பட முடியாது. யாழ்ப்பாணத்தில் காணப்படும் ஊடக மாபீயாவே பிரதான சவாலாக கருதப்பட வேண்டும். ஊடகங்கள் மிக மோசமாக எம்மைத் தாக்கி வருகின்றன. அவர்கள் மக்களுக்கு சேவையாற்றுவதற்காக அரசியலில் ஈடுபடவில்லை, மாறாக தங்களது சுயலாப அரசியல் தேவைகளை பூர்த்தி செய்யவே முயற்சிக்கின்றனர். யாழ்ப்பாணத்தில் சுயாதீனமான ஊடகம் இயங்கி வந்தால் எங்களினால் இலகு வெற்றியீட்ட முடியும்.

யாழ்ப்பாணத்தில் இயங்கி வரும் ஊடகங்கள் மிகுந்த திட்டமிட்ட வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளித்து வருகின்றன.

யாழ்ப்பாண ஊடகங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டுப்படுத்தி வருகின்றது. நான் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியராக கடமையாற்றிய காலத்தில் நான் எந்தவொரு அரசியல் கட்சியின் பக்கத்தையும் எடுத்துக்கொள்ளவில்லை.

தமிழீழ விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்படும் வரையில் உதயன் பத்திரிகை அரசியல் விவகாரங்களில் தலையீடு செய்யவில்லை. எனினும் இன்று அரசியல் சுயலாப நோக்கங்களின் அடிப்படையில் பத்திரிகை பிரசூரிக்கப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தாளத்திற்கு ஆட்டம் போடும் உதயன் பத்திரிகையை நான் குற்றம் சுமத்துவேன். மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் முன்னாள் போராளிகள் எடுத்து வரும் முனைப்புக்கள் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக உதயன் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரும் ஜனநாயகப் போராளிகள் அமைப்பின் தலமை வேட்பாளரும்வித்தியாதரன் தெரிவித்துள்ளார்.

Related Posts