Ad Widget

யாழ்.ஆயரை சந்தித்தார் ஆஸி. உயர்ஸ்தானிகர்

தங்களுக்கு இராணுவ அச்சுறுத்தல் இருப்பதாக, புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் முறையிட்டுள்ளனர் என்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்துள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ரூபின் மூடியிடம், யாழ். மறைவமாட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.

உயர்ஸ்தானிகருக்கும் யாழ். ஆயருக்கும் இடையிலான சந்திப்பொன்று, யாழ்.ஆயர் இல்லத்தில் திங்கட்கிழமை (06), நடைபெற்றது. இந்த சந்திப்பு முடிந்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே ஆயர், மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், முன்னாள் போராளிகளுக்கு இராணுவ அச்சுறுத்தல் இருப்பதான விடயம் பிரதமரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதனால் இப்பிரச்சினைக்கு உரிய தீர்வு கிட்டும் என்று உயர்ஸ்தானிகர் தன்னிடம் கூறியதாகத் தெரிவித்தார்.

அத்துடன், பிரதமர் மற்றும் வடமாகாண முதலமைச்சர் ஆகியோருக்கிடையில் ஏற்பட்டிருக்கும் முறுகல் நிலை குறித்தும் உயர்ஸ்தானிகர் தன்னிடம் வினவியதாக ஆயர் கூறினார்.

காணிகள் விடுவிக்கப்படுவதால் மக்கள் மனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளமை தொடர்பிலும், மீளக்குடியேற்றப்பட்ட மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருவது குறித்தும் தான் உயர்ஸ்தானிகருக்கு எடுத்துரைத்ததாக அவர் கூறினார்.

1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக கூறப்பட் போதிலும் அதில் ஒரு பகுதி மாத்திரமே விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது பற்றியும் தான் எடுத்துரைத்ததாக ஆயர் தெரிவித்தார்.

இவற்றைக் கருத்திற்கொண்ட உயர்ஸ்தானிகர், ‘கிளிநொச்சியில் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீட்டுத்திட்டம் மற்றும் அதனுடன் இணைந்து மக்களின் வாழ்வாதார உதவிகளை முன்னெடுப்பதற்கு அவுஸ்திரேலியா அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்வது குறித்து தெளிவுபடுத்தினார்’ என்று ஆயர் மேலும் கூறினார்.

Related Posts