Ad Widget

யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு!

கொரோனா வைரஸ் பரவல் தாக்கம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவைகள் இன்று முதல் மீண்டும் வழமைக்குத் திரும்புகின்றன.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் இருந்து இரண்டு புகையிரதங்கள் இன்று கொழும்பை நோக்கித் தமது பயணத்தினை ஆரம்பித்துள்ளதாக யாழ்ப்பாண புகையிரத நிலைய அதிபர் பிரதீபன் எமது கெப்பிட்டல் செய்திச் சேவைக்குத் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், முதலாவது புகையிரதம் காங்கேசன்துறையில் இருந்து காலை 5.30 க்கும் யாழ்ப்பாணத்தில் இருந்து காலை 6.10 க்கும் புறப்படுகின்ற உத்தரதேவி கடுகதி புகையிரதமும், காங்கேசன்துறையில் இருந்து காலை 9 மணிக்கு புறப்பட்டு, யாழ்ப்பாணத்தில் இருந்து 9.45 க்கு புறப்படும் யாழ் தேவி புகையிரதமும் தமது சேவைகளை ஆரம்பித்து இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மேலும், கல்கிசையில் இருந்து 5.55 க்கும் , 6.35 க்கு கொழும்பிலிருந்தும் புறப்படும் யாழ் தேவி புகையிரதமும், 11.50 க்கு கொழும்பிலிருந்து புறப்படும் உத்தரதேவி புகையிரதமும் இன்று சேவைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஏனைய புகையிரத சேவைகள் 25 ஆம் திகதி தொடக்கம் முக்கியமாக கொழும்பிலிருந்து புறப்படும் குளிரூட்டப்பட்ட புகையிரதமும், இரவு தபால் புகையிரதம் உள்ளிட்ட அனைத்து புகையிரத சேவைகளும் படிப்படியாக ஆரம்பமாக இருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுமக்கள் வழமைபோன்று ஆசனங்களை யாழ்ப்பாண புகையிரத நிலையத்தில் முற்பதிவு செய்து கொள்ள முடியும் என அறிவித்துள்ளதோடு மேலதிக விபரங்களுக்கு 021 2222271 என்ற தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பினை மேற்கொண்டு அறிந்துகொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பயணிகள் அனைவரும் கட்டாயமாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றி புகையிரதத்தில் தமது பயணத்தினை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts