தமிழ்நாட்டின் சென்னை மற்றும் கடலூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிற்கு, அதன் தொடர்ச்சியாக வரக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாக்கும் முகமாக இலங்கையில் இருந்து ஒரு வைத்தியர் குழு யாழ்ப்பாணம் றோட்டறிக்கழக ஏற்பாட்டில் தமிழ்நாடு செல்லவுள்ளது.
வரும் ஞாயிறு 13ஆம் திகதி பின்னிரவு இலங்கையில் இருந்து புறப்படும் இந்தக் குழு திங்கள் 14ஆம் திகதி முதல் சென்னை மற்றும் கடலூர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக மருத்துவ முகாம்களை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.
இந்தக் குழுவின் ஒரு பகுதியினரை நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தில் அதன் துணைத்தூதர் திரு நடராஜன் அவர்கள் சந்தித்தார். இதன்போது விசா மற்றும் பயண ஏற்பாடுகள் தொடர்பாகவும் தமிழ்நாட்டில் நாடாத்தவுள்ள மருத்துவ முகாம்களிற்கான ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாணம் றோட்டறிக் கழகத்தின் இந்த முயற்சியை அவர் பெரிதும் பாராட்டி வரவேற்றார். அதுமட்டுமல்லாமல் இந்திய மத்திய அரசின் கொள்கையின் பிரகாரம் அனர்த்த நிவாரணத்திற்கான உதவிகள் எதனையும் தன்னால் நேரடியாக பெற்றுக்கொள்ள முடியாதெனவும், றோட்டறிக் கழகம் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஊடாக தேவையானவற்றினை இங்குள்ளவர்கள் தமிழ்நாட்டிலுள்ள பாதிக்கப்பட்ட மக்களிற்கு செய்யமுடியும் எனவும் தெரிவித்தார்.