Ad Widget

யாழ்ப்பாணத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நீடிக்கவேண்டும்!!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் குறைந்தது 7 நாள்களுக்கு ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி வைத்திருக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாணம் மாவட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பான எழுத்துமூலக் கோரிக்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளருக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அதன் வடமாகாண இணைப்பாளர் மருத்துவர் த. காண்டீபன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் அனுப்பிவைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு நாளை (இன்று ) திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாங்கள் அவசர சந்திப்பு ஒன்றை இன்று (நேற்று) நடத்தியிருந்தோம். ஆதார வைத்தியசாலை பருத்தித்துறையின் கிளை, தெல்லிபளை புற்றுநோய் வைத்தியசாலையின் கிளை, யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பிரிவின் கிளை மற்றும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் கிளை ஆகியவற்றின் கிளை சங்கங்களின் மருத்துவர்கள் பங்கேற்றனர்.

குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவை நீக்குவதற்கான இந்த முடிவானது வடக்கு மாகாணத்தின் சுகாதார மருத்துவ அதிகாரிகளின் வலுவான பரிந்துரைகளுக்கு எதிராக எடுக்கப்பட்டது என்பதை நாங்கள் அறிந்து கொண்டோம்.

16 தொற்று நோயாளர்கள், மதபோதகருடன் இருந்து கோரோனா தொற்றிக்குள்ளாகியதும் அவருடன் நெருங்கிய தொடர்புகள் கொண்ட 329 பேர்களில் 80க்கு மேற்பட்டோர் இன்னமும் பரிசோதனைக்கு உட்படாமலும் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த ஆயிரத்து 200 க்கும் மேற்பட்டவர்கள் பரிசோதனைக்கு உட்படாமலும் இருப்பதால், வடக்கு மாகாண சுகாதார அதிகாரிகள் ஏப்ரல் 27 க்குப் பிறகு மட்டுமே ஊரடங்கு உத்தரவை நீக்க பரிந்துரைத்துள்ளனர்.

இந்த காலகட்டத்தில் பரிசோதனைகளை ஆகக் குறைந்தது இந்த நெருங்கிய தொடர்புகளுடன் செய்வதன் மூலம் யாழ்ப்பாணத்தின் சமூக தொற்று நிலை சம்பந்தமான வெளிப்பாடு மேம்படும்.

குறுகிய அறிவிப்புடன் ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பின்னர், பொது மக்கள் பல்வேறு வியாதிகளுக்கு மருத்துவமனைகளுக்கு வருவார்கள். மேலும் கோவிட் -19 க்கான குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கைகளுடன் மக்களின் தேவைகளை நிறைவு செய்ய எல்லா மருத்துவமனைகள் இன்னமும் தயார் நிலையில் இல்லை.

எனவே, நெருங்கிய தொடர்புகளின் பரிசோதனைகளை நிறைவு செய்வதற்கும், மருத்துவமனைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களில் உள்ள சுகாதார ஊழியர்களின் தனிப்பட்ட பாதுகாப்பிற்கான வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஊரடங்கு உத்தரவை குறைந்தது 7 நாள்களுக்கு நீட்டிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம்.

Related Posts