Ad Widget

யாழில் 20வது திருத்தத்திற்கு எதிப்பு தெரிவித்து மின் விளக்குகளை அணைத்து ஒளி விளக்குகளை ஏற்றுக!!

அரசியலமைப்பின் 20வது திருத்த சட்டமூலத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு, வீடுகளில் மின் விளக்குகளை அணைத்து ஒளி விளக்கொன்றினை ஏற்றுமாறு ஜனநாயகத்திற்கான ஒன்றிணைந்த இளையோர் அணி மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே குறித்த அமைப்பின் பிரதிநிதி அ.பெனிஸ்லஸ் துஷான் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “எங்களுடைய உடனடி நோக்கமாக தற்போது கொண்டுவரப்பட்டிருக்கும் 20வது திருத்தத்திற்கு எதிரான விழிப்புணர்வை நாங்கள் செய்துகொன்டிருக்கின்றோம்.

மிக முக்கியமான இந்த ஜனநாயக விரோதமான 20வது திருத்தம் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்தோடு எங்களுடைய அரசியல்வாதிகளுக்கும் இது சார்ந்த விழிப்புணர்பு கிடைக்க வேண்டும் என செயற்பட்டு வருகின்றோம்.

கடந்த மூன்று தினங்களாக மதத் தலைவர்கள், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், துறைசார் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டாளர்களையும் நாங்கள் சந்தித்துள்ளோம்.

உதாரணமாக மதகுருமார்கள், வணிகர் கழகம், பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள், பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம், பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் சங்கம், இலங்கை தமிழ் ஆசிரியர் சங்கம் மற்றும் இலங்கை தமிழ் அதிபர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகளை சந்தித்துள்ளோம்.

குறித்த பிரதிநிதிகளுடைய கலந்துரையாடலுக்கும் ஏற்ப நாளை, எங்களுடைய மனுக்களை எமது சமூகம் மற்றும் ஏனைய சமூகத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பவுள்ளோம்.

அத்தோடு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சபாநாயகருக்கும் எங்களுடைய மனுக்களை அனுப்பவுள்ளோம்.

அத்தோடு மிக முக்கியமாக நாங்கள் மக்களிடம் கேட்டுக்கொள்வது யாதெனில், நாளை 20 ஆம் திகதி 20 ஆவது மணி (இரவு 8) நேரத்தில் உங்கள் வீடுகளில் ஒரு விழிர்ப்புணர்வு போராட்டத்தை நீங்கள் செய்ய வேண்டும்.

தற்போதைய கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக அது சார்ந்த சட்டங்களை பின்பற்றி, குறித்த மணி நேரத்தில் மூன்று நிமிடங்களுக்கு உங்களுடைய வீட்டின் மின் விளக்குகளை அணைத்து இருளாக இருக்கும் காலப்பகுதியில் ஒரு ஒளி விளக்கினை ஏற்றி உங்களுடைய எதிர்ப்புகளை தெரிவித்துக்கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.

Related Posts