Ad Widget

யாழில் வாள் வெட்டு தாக்குதலுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் பலி

வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். குறித்த வாள்வெட்டு சம்பவம் நேற்று(11.03.2024) இடம்பெற்றுள்ளது.

இதன்போது வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதான தவச்செல்வம் பவிதரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.உயிரிழந்த இளைஞன் காரைநகருக்கு சென்று விட்டு வட்டுக்கோட்டை திரும்பும்போதே குறித்த வாள்வெட்டு தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

காயமடைந்தவர் வட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.அத்துடன் முன்னர் நடந்த வாள்வெட்டு சம்பவத்திற்கு பழிதீர்க்கும் வகையில் குறித்த வாள்வெட்டுத் தாக்குதல் நடாத்தப்பட்டதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

 

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த குடும்பஸ்தரும் அவரது மனைவியும் காரைநகரில் இருந்து வட்டுக்கோட்டை – மாவடியில் உள்ள வீட்டுக்கு சென்றுகொண்டிருந்தவேளை பொன்னாலை கடற்படை முகாமுக்கு அருகாமையில் இரண்டு கார்களில் ஆயுதங்களுடன் நின்ற சிலர் அவர்களை வழி மறித்தனர்.
இதன்போது இருவரும் தப்பித்து கடற்படை முகாமுக்குள் உள்நுழைந்தனர். இந்நிலையில் கடற்படையினர் அவர்களை வெளியே விரட்டினர். இதனால் அவர்கள் வெளியே வந்தவேளை, ஒரு காரில் மனைவியையும், அடுத்த காரில் குறித்த நபரையும் ஏற்றிக்கொண்டு குறித்த குழு அங்கிருந்து சென்றது.
பின்னர் மனைவியை சித்தங்கேணி சந்தியில் இறக்கி விட்டனர். அதன்பின்னர் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்வதற்கு சென்றுள்ளார். இந்நிலையில் குறித்த நபரை கடத்திச் சென்றவர்கள் அவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்ட பின்னர் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலையினுள் காரில் சென்று, வைத்தியசாலையில் உள்ள மாமரத்துக்கு கீழே அவரை தூக்கி வீசிவிட்டு சென்றனர்.
இந்நிலையில் வைத்தியசாலையில் இருந்த சுகாதார பணியாளர்கள் இது குறித்து வைத்தியருக்கு தொலைபேசி மூலம் தெரியப்படுத்தினர். அவ்விடத்திற்கு வந்த வைத்தியர் நோயாளர் காவுவண்டி மூலம் அவரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை சில நிமிடங்களில் அவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று 12.03.2024 அன்று அவருக்கு பிறந்தநாள் என்ற நிலையில் நேற்று இக்கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Related Posts