Ad Widget

யாழில் முச்சக்கரவண்டி சாரதியொருவரின் மோசமான செயல்!!

யாழ். நகர் சேவைத் தரிப்பிட அனுமதி அற்ற, வீதியால் சென்ற முச்சக்கரவண்டி ஒன்றில் பயணித்த இளம் பெண் ஒருவரை மிரட்டி சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் குறைவான தூரத்திற்கு 2000 ரூபா கூலி கொடுக்குமாறு மிரட்டிப் பணம் பெற்றுக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் வைரவர் கோயிலடி அருகாமையில் நேற்று முற்பகல் இச் சம்பவம் பதிவாகியுள்ளது.

இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதான அருகாமையிலிருந்து யாழ்ப்பாணம் நகருக்கு செல்ல இளம் பெண் ஒருவர் வீதியால் சென்ற ஒரு முச்சக்கரவண்டியை மறித்து ஏறியுள்ளார்.

தரிப்பிட சேவை அனுமதி பெறாத ஒரு முச்சக்கரவண்டியில் ஏறிய பெண் தான் செல்லவுள்ள இடத்தை கூறி எவ்வளவு பணம் என்று கோரியபோது பார்த்து எடுக்கலாம் என கூறி சாரதி அப்பெண்னை கூட்டிச்சென்றுள்ளார்.

யாழ். நகரை அடைந்ததும் கூலியாக 2000 ரூபா பணத்தை தரும்படி கோரியுள்ளார். ஆனால் அப் பெண் தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் ஏன் ஒரு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள இடத்துக்கு இவ்வளவு கூலி என்றும் கேட்டுள்ளார்.

அதற்கு பதிலளிக்காத தரிப்பிட சேவை அனுமதி பெறாத முச்சக்கரவண்டி சாரதி 2000 ரூபா பணத்தை கொடுக்குமாறு மிரட்டியுள்ளார்.

சாரதியின் மிரட்டலால் அச்சமுற்ற இளம் பெண் தன்னிடம் 1500 ரூபாதான் இருப்பதாக கூறி பணத்தை கொடுத்துள்ளார்.

இதன்பின்னர் அந்த இளம் பெண் யாழ். வைரவர் கோயிலடியிலுள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்திற்கு அழுதவாறு சென்று நடந்த சம்பவத்தை தெரிவித்து குறித்த தூரத்துக்கு எவ்வளவு கூலி என்று கேட்டுள்ளார்.

எனவே இளம்பெண் ஏமாற்றப்பட்டுள்ளார் என்பதை புரிந்துகொண்ட வைரவர் கோயில் முச்சக்கரவண்டி தரிப்பிட சாரதிகள் துரிதமாக செயற்பட்டு இச் சம்பவத்துடன் தொடர்புடைய தரிப்பிட சேவை அனுமதியில்லாத முச்சக்கரவண்டி சாரதியை தேடி கண்டுபிடித்து சாரதியிடம் விளக்கம் கோரியிருந்தனர்.

ஆனாலும் சம்பவத்தை ஏற்றுக்கொள்ளாத முச்சக்கரவண்டி சாரதி, பின்னர் தனது தவறை ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து ஏமாற்றி கூலியாக பறிக்கப்பட்ட பணத்தை வைரவர் கோயிலடி முச்சக்கரவண்டி சாரதிகள் அப் பெண்ணிடம் மீள பெற்றுக்கொடுத்ததுடன் இனி இவ்வாறான மோசடிகளில் ஈடுபடக்கூடாது எனக் கூறி குறித்த மோசடியில் ஈடுபட்ட சாரதியை எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இவ்வாறான தரிப்பிட அனுமதி அற்ற சேவைகளை தவிர்க்குமாறும் பொதுமக்களுக்கு யாழ். முச்சக்கரவண்டி சாரதிகள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts