Ad Widget

யாழில் போலி விமானச்சீட்டு விநியோகித்து பல இலட்சம் மோசடி!!

வெளிநாடுகளுக்கான விமான சேவை பயணச்சீட்டுக்களை போலியாக விநியோகித்து பல இலட்சம் ரூபா பணத்தைச் சுருட்டிக்கொண்டு பயண முகவர் நிறுவன முகாமையாளர் தலைமறைவாகி விட்டார் என யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் நேற்று (15) முறையிடப்பட்டது.

யாழ்ப்பாணம் பிறவுன் வீதியில் அமைந்துள்ள பயண முகவர் நிறுவனத்துக்கு எதிராகவே இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எனத் தெரிவித்து 35 பேருக்கு மேற்பட்டவர்கள் நேற்று வெள்ளிக்கிழமை மாலை யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்றனர்.

அந்த நிறுவனத்தில் வெளிநாடுகளுக்குப் பயணிப்பதற்கு சிறிலங்கன் எயார் லைன்ஸ் விமான சேவைக்கு பணம் செலுத்தி முற்பதிவு செய்துள்ளனர். எனினும் அந்த நிறுவனத்தால் வழங்கப்பட்டது போலி விமான பயணச் சிட்டை என அவர்கள் பின்னரே அறிந்துள்ளனர்.

அதுதொடர்பில் அந்த நிறுவனத்தை நாடிய போது, அதன் முகாமையாளர் இல்லை என அங்கு பணியாற்றி பெண் பணியாளர் ஒருவர் தெரிவித்து வந்துள்ளார். முகாமையாளர் வந்ததால்தான் பணத்தை மீள வழங்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். சிலர் கட்டுநாயக்க விமான நிலையத்துக்குச் சென்று போலி விமானச் சிட்டை எனத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு வழங்க நேற்று சென்றனர். அவர்களுடன் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ள பங்காளர் எனத் தெரிவித்த ஒருவரும் தனது சட்டத்தரணியுடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்றிருந்தார்.

பாதிக்கப்பட்டவர்களால் பயண முகவர் நிறுவனத்தின் உதவி முகாமையாளர், பெண் பணியாளர் ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், பாதிக்கப்பட்டவர்களை இன்று காலை 10 மணிக்கு முறைப்பாடு வழங்க வருமாறு திருப்பி அனுப்பியுள்ளனர்.

Related Posts