Ad Widget

யாழில் பொலிஸாரைத் தாக்கிய குற்றச்சாட்டில் பெண்கள் உட்பட 17 பேர் விளக்கமறியலில்

யாழ். கொடிகாமம் பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகத்தில் பெண்கள் உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் கசிப்பு உற்பத்தியும் விற்பனையும் இடம்பெற்று வருவதாக பொலிசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பிரகாரம் அப்பகுதிக்கு சென்ற பொலிசார் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரை கைது செய்தனர். அவரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட வேளை, திடீர் என அங்கு கூடிய சிலர் கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல விடாது தடுத்தனர்.

அவ்வேளை குறித்த குழு திடீர் என பொலிசார் மீது தாக்குதல் மேற்கொண்டது. இதனால் காயமடைந்த இரண்டு பொலிசார் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து கசிப்பு உற்பத்தி செய்தார் என கூறப்படும் நபர் உட்பட 17 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் பொலிசாரால் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அனைவரையும் எதிர்வரும் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீதிபதி செல்லையா கணபதிப்பிள்ளை உத்தரவு இட்டுள்ளார்.

Related Posts