Ad Widget

யாழில் பொலிஸாரின் விசேட மோட்டார் சைக்கிள் குழு

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனின் பணிப்புரைக்கமைய யாழ்.மாவட்டத்தில் நடைபெறுகின்ற குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த 10 பேர் கொண்ட விசேட மோட்டார் சைக்கிள் பொலிஸ் குழுவொன்று அமைக்கப்பட்டு செயற்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

police-bike-1

யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி.வீரசிங்கவின் கண்காணிப்பின் கீழ் இந்த பொலிஸ் குழு செயற்படுகின்றது.

தினமும் காலை 7 மணியில் இருந்து மாலை 7 மணி வரை இந்த பொலிஸ் விசேட குழு நகரப்பகுதியில் சுற்றுக்காவலில் ஈடுபடும். வாள்வெட்டு சம்பவங்கள், பாரிய குற்றச்செயல்கள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுபவர்களை இந்தப் பொலிஸ் குழு கைது செய்யும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

பொது இடங்களில் நின்று வீண்பொழுது கழித்து, சட்டவிரோதமாக கூடுகின்றவர்களையும் இந்தப் பொலிஸ் குழு கண்காணிக்கும். இந்தப் பொலிஸ் குழுவில், சிலர் சிவில் உடையிலும், ஒரு சிலர் பொலிஸ் சீருடையிலும் சுற்றுக்காவலில் ஈடுபடுவர்.

அண்மைக் காலமாக யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதிகளை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்கள், யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிபரின் வாசஸ்தலத்தின் முன்நிறுத்தி வைக்கப்பட்ட கார் கண்ணாடி உடைத்தமை, மாவட்ட நீதிபதியின் வீட்டுக்கு கல்வீச்சு தாக்குதல் முயற்சி மேற்கொண்டமை போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்லுகின்றது.

இது தொடர்பில் பொலிஸார் மீது கடுமையாக சாடிய மேல் நீதிமன்ற நீதிபதி, பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதியில் இறங்கி கடமை புரிய வேண்டும். பொலிஸ் நிலையத்தில் இருந்து குற்றங்களை கட்டுப்படுத்துவது கடினம் என கூறினார். இதனையடுத்தே இந்தக்குழு உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

Related Posts