Ad Widget

யாழில் நூதனத்திருட்டில் ஈடுபடும் இளைஞர்கள் தொடர்பில் எச்சரிக்கை!

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக காரில் நடமாடும் நூதனத் திருடர்கள் வர்த்தக நிலையங்களில் பொருட் கொள்வனவு செய்வது போன்று பாசாங்கு செய்து பணத்தை அபகரிப்பதாக வர்த்தகர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்.குடாநாட்டின் பல பகுதிகளிலும் கடந்த இரு நாட்களாக விலை உயர்ந்த காரில் நடமாடும் இரு தென்னிலங்கை இளைஞர்கள் நூதனத் திருட்டில் ஈடுபடுவதனால் பல வர்த்தகர்கள் தமது பணத்தினை இழந்து வருகின்றதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு மோசடியில் ஈடுபடும் கார் இளைஞர்கள் வர்த்தக நிலையங்களில் அதிக வாடிக்கையாளர்கள் இருக்கும் சமயமே இவ்வாறு மோசடியில் ஈடுபடுகின்றனர்.

குறித்த இளைஞர்கள் வர்த்தக நிலையங்களிற்குச் சென்று 100 ரூபாவிற்கும் குறைவான பொருளைக் கொள்வனவு செய்கின்றனர். அதற்கான 2 ஆயிரம் ரூபா ஓர் நோட்டை வழங்கி மிகுதிப் பணத்தைப் பெறுகின்றனர்.

அதன் பிற்பாடு எம்மிடம் 100 ரூபா தாள் உள்ளது அதனால் 2 ஆயிரம் ரூபா தாளைத் தாருங்கள் என மீண்டும் வர்த்தகரிடம் கோர வர்த்தகர்கள் 2 ஆயிரம் ரூபா தாளை வழங்கி விட்டு முதல் தந்த மீதியை வழங்குமாறு கோரினால் பயித்தியமா மிகுதிப் பணமே வழங்கவில்லையே அதுதான் கோருகின்றேன் என மோசடியாக வர்த்தகர்களுடன் தகராறில் ஈடுபட்டு பணத்தினை பெறுவதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான மோசடிக் கும்பல் யாழ் நகர், கந்தர்மடம், திருநெல்வெலி ஆகிய பகுதிகளுடன் சங்கானை, சித்தங்கேணியிலும் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.

இவ்வாறு பணத்தை இழந்த வர்த்தகர்கள் பொலிசில் முறைப்பாடு செய்யவும் வெட்கம் காரணமாக அஞ்சுகின்றனர்.

Related Posts