யாழ்ப்பாணத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்த 457 பேருக்கு ஆசிரிய நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (சனிக்கிழமை) ஊடகமொன்றிற்கு கருத்துத் தெரிவித்தபோதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
“தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனங்கள் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெறவுள்ளது.
தொண்டர் ஆசிரியர்களுக்குரிய தகைமைகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கு 2013ஆம் ஆண்டுக்கு முன்னர், தொடராக மூன்றாண்டுகளுக்கு மேல் கடமையாற்றியவர்களின் சேவைகள் கவனத்திற் கொள்ளப்படும்.
அத்துடன் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதியினதும் பிரதமரினதும் ஆலோசனைக்கு அமைய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்தினால் முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றோம்” என கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.