Ad Widget

யாழில் தேர்தல் கடமையில் 6,500 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தபடவுள்ளனர்: அரசாங்க அதிபர்

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலிற்கான கடமையில் 6 ஆயிரத்து 500 அரச உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான பாதுகாப்பு மற்றும் வாக்களிப்பு நிலைய ஏற்பாடுகள் தொடர்பில் நேற்று (வியாழக்கிழமை) யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் 4 லட்சத்து 68 ஆயிரத்து 476 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 521 வாக்களிப்பு நிலையங்களும், 243 வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. யாழ்.மாவடடத்தில் 1 மாநகர சபை உட்பட 3 நகர சபை, 13 பிரதேச சபை அடங்கலாக 17 உள்ளூராட்சி சபைகளிற்கான தேர்தல்களில் இம்முறை, அந்தந்த வட்டாரங்களில் வாக்கெண்ணும் பணிகள் இடம்பெறவுள்ளன.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மத்திய வாக்கென்னும் நிலையமாக செயற்படவுள்ளதுடன், யாழ்.மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்கென்னும் நிலையங்களிலிருந்தும் முடிவுகள் பெறப்பட்டு, யாழ்.மத்திய நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள மத்திய வாக்கெண்ணும் நிலையத்தின் முடிவுகள் அறிவிக்கப்படும்.

இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்துச் சேவையின் பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றையதினம், தூர இடத்தில் இருந்தும் இடம்பெயர்ந்துள்ள வாக்காளர்கள் தமது வாக்குகளை அளிப்பதற்கு வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்வதற்குரிய பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

பொது மக்கள் காலை 7மணிமுதல் மாலை 4 மணி வரை தமது வாக்குகளை அளிக்க முடியும். இரவு 8 மணிக்கு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். பொது மக்கள் தமது அடையாள அட்டை மற்றும் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட அடையாள அட்டையுடன் சென்று தமது வாக்குகளை அளிக்க முடியும்” என கூறினார்.

Related Posts