Ad Widget

யாழில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளன: ஸ்ரீரங்கேஸ்வரன்

sri-rankeswaranயாழ். மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்து செல்கின்றதாக பருத்தித்துறை பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் ஜயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற போது உரையாற்றுகையிலே அவர் இதனைத் தெரிவித்தார்.

‘வலி. வடக்கில் மீள்குடியேற்றத்தினை வலியுறுத்தி கடந்த வாரம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக பருத்தித்துறையிலிருந்து சென்ற பொதுமக்களின் பஸ் வல்லைவெளியில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டது.

இத்தாக்குதலை மேற்கொண்டவர்கள் யார் என பொலிஸார் இதுவரையிலும் இனங்காணவில்லையென்பதுடன், இவ்விடயம் குறித்த விசாரணைகளும் மேற்கொள்ளவில்லை’ என்று அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், ‘பருத்தித்துறை பிரதேசத்தில் பல வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் தொடந்தும் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் குறித்து பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. பொலிஸாரின் இவ்வாறான நடவடிக்கையினால் யாழ். மாவட்டத்தின் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்து போகின்றதாகவும்’ அவர் குறிப்பிட்டார்.

‘எனவே, இவ்வாறான தாக்குதல் சம்பவங்களை மேற்கொள்பவர்கள் யார் என பொலிஸார் இணங்கண்டு, சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts