Ad Widget

யாழில் கொரோனா மருத்துவமனைக்கு எதிராக போராட்டம் நடத்த மக்கள் முயற்சி- பொலிஸார் குவிப்பு

யாழ்ப்பாணம்- வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச மருத்துவமனையை, கொரோனா மருத்துவ நிலையமாக மாற்றும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

மாவட்டத்துக்கு ஒரு கொரோனா வைத்தியசாலை அமைக்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணத்துக்கான கொரோனா மருத்துவமனையாக மருதங்கேணி பிரதேச மருத்துவமனை தெரிவு செய்யப்பட்டு, அதன் பணிகள் அனைத்தும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், இன்றைய தினம் அங்கு பணியாற்றுவதற்கான மருத்துவர்கள் மற்றும் தாதியர்கள் உட்பட மருத்துவ பணியாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதற்கான முன்னேற்பாடாக அழைக்கப்பட்டிருந்த மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பு தொடர்பான பயிற்சி வகுப்புகளை மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு, அவர்கள் பணிக்கு காலை 8 மணியிலிருந்து அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள்.

இதேவேளை தமது மருதங்கேணி பிரதேச மருத்துவமனைக்கு ஒரு பொறுப்பு மருத்துவ அதிகாரி உட்பட இரண்டு மேலதிக மருத்துவர்களும் ஒரு பல் மருத்துவரும் கடமை ஆற்ற வேண்டிய நிலையில், தற்போது ஓய்வு பெற்ற வைத்திய அதிகாரி ஒருவரே கடமையில் ஈடுபட்டிருப்பதாகவும், இதனால் மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையில் ஆண், பெண் மகப்பேற்று விடுதிகள் இயங்காது இருப்பதாகவும், வெளிநோயாளர் பிரிவு கூட ஒழுங்காக இயங்காத நிலையில் கொரோனா மருத்துவமனை அமைக்கப்பட்டிருப்பது தமக்கு வேதனை அளிப்பதாக மருதங்கேணி பிரதேச மக்கள் தெரிவிக்கிறார்கள்.

தமக்கான அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்தி தராத சுகாதார அமைச்சு மற்றும் அரசாங்கம், தற்போது வெளிநோயாளர் சிகிச்சையை கூட பெற்றுக்கொள்ள முடியாத நிலையை உருவாக்கியுள்ளதாக தெரிவித்து, இன்றைய தினம் மக்கள் பலர் எதிர்ப்பு தெரிவிக்க முன் வந்திருந்தனர்.

இதனால் பொலிஸார் குவிக்கப்பட்டு, வீதியால் சென்ற அனைவரும் பரிசோதிக்கப்பட்டு கடுமையாக எச்சரிக்கப்பட்டும் பலர் அனுப்பி வைக்கப்பட்டதாக மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இவ்விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்த பருத்தித்துறை பிரதேச சபையின் உறுப்பினரும் மருத்துவமனையின் அபிவிருத்திக்குழு சேவைப் பொருளாலருமான வேலுப்பிள்ளை பிரசாந்தன், “மருதங்கேணி பிரதேச வைத்தியசாலையை கொரோனா வைத்தியசாலையாக மாற்றுவதை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

கொரோனா மருத்துவ நிலையம் அமைப்பதற்கு நாங்கள் எதிரானவர்கள் இல்லை. மருதங்கேணி பிரதேச மருத்துவமனை சாதாரன மக்களுக்கான வழமையான சிகிச்சை நிலையமாக தொடர்ந்தும் இயங்க வைக்க வேண்டும்.

இதேவேளை நேற்றைய தினம் அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் வீடுகளுக்குச் சென்ற பளை பொலிஸார், அவர்களை கடுமையாக மிரட்டியும் அச்சுறுத்தியும் சென்றிருக்கிறார்கள்.

குறிப்பாக இன்றைய தினம் மருதங்கேணி பிரதேச மருத்துவமனைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற உள்ளதாகவும், அதில் கலந்து கொண்டால், கைது செய்யப்படுவீர்கள் என்றும் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts