Ad Widget

யாழில் கனடாவிற்கு அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி – அரசியல்வாதி கைது

கனடாவிற்கு அனுப்புவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்த அரசியல்வாதி ஒருவரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த நபர் வெளிநாடு தப்பி செல்ல முயன்ற போது யாழ். செம்மணி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் மானிப்பாய் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், கடந்த 2022ஆம் ஆண்டுக்கும் 2023ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட கால பகுதியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவரை கனடா நாட்டிற்கு அனுப்புவதாக கூறி கட்டம் கட்டமாக ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் பணத்தினை வாங்கி மோசடி செய்துள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு இருந்த நிலையில் தலைமறைவாகி இருந்தார்.

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட நபர் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையம் நோக்கி சொகுசு பேருந்தில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் செம்மணி பகுதியில் பேருந்தினை மறித்து சந்தேகநபரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related Posts