Ad Widget

யாழில் உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞனுக்குப் பிணை!

வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்த இளைஞனுடன் கைதான மற்றைய இளைஞன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சித்தங்கேணி பகுதியை சேர்ந்த நாகராசா அலெக்ஸ் எனும் இளைஞனை கடந்த 08ஆம் திகதி திருட்டுச் சம்பவம் ஒன்றின் விசாரணைக்காக வட்டுக்கோட்டை பொலிஸார் அழைத்துள்ளனர்.

இந்நிலையில் தனது நண்பனுடன் குறித்த இளைஞன் பொலிஸ் நிலையம் சென்றிருந்த நிலையில் இருவரையும் கைதுசெய்த பொலிஸார் இருவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை, அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் விளக்கமறியல் வைக்கப்பட்டிருந்த அலெக்ஸ் பொலிஸாரினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார்.

இளைஞனின் உயிரிழப்பை அடுத்து, மேற்கொள்ளப்பட்ட உடற்கூற்று பரிசோதனையில், உடலில் சித்தரவதை காயங்கள் காணப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

அதேவேளை பொலிஸார் தன்னை எவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தினார்கள் என்பது குறித்து இளைஞன் உயிரிழப்பதற்கு முன்னர் கூறிய வீடியோவொன்றும் இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் உயிரிழந்த இளைஞனின் நண்பன் மீதான களவு குற்றசாட்டு தொடர்பிலான வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மல்லாகம் நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த இளைஞனை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்தது.

Related Posts