Ad Widget

யாழில் இடம்பெறவுள்ள எட்டாவது சர்வதேச வர்த்தக கண்காட்சி!

எட்டாவது சர்வதேச வர்த்தக கண்காட்சி எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக யாழ். வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் விக்ஸே தெரிவித்துள்ளார்

சர்வதேச வர்த்தக கண்காட்சி தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று(24) நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச கண்காட்சி கூடம் மற்றும் இலங்கை மாநாட்டு பணியகம், இலங்கை மாநகர சபை, யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றம் ஆகிய இணைந்து சர்வதேச வர்த்தக கண்காட்சியினை வருடம் தோறும் நடாத்தி வருகின்றார்கள்.

அந்தவகையில் எதிர்வரும் 27 ஆம் திகதி எட்டாவது சர்வதேச வர்த்தக கண்காட்சி யாழ்.மாநகர சபை வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

இக்கண்காட்சியை காலை 10.00 மணி தொடக்கம் இரவு 8.00 மணி வரையும் கண்காட்சி கூடத்தினை மக்கள் பார்வையிட முடியும்.

இக்கண்காட்சி, எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகி 28 மற்றும் 29 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த வர்த்தக கண்காட்சியில் பிரதம விருந்தினராக வர்த்தக வாணிப அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்துகொண்டு கண்காட்சியினை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.

மேலும் இக் கண்காட்சியில் 300 ற்கும் மேற்பட்ட காட்சிக் கூடங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதோடு சர்வதேச மற்றும் யாழ்ப்பாண உள்ளுர் உற்பத்திகளும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.

60 ஆயிரத்திற்கும் அதிகமான மக்களை எதிர்பார்ப்பதுடன், பாடசாலை மாணவர்களுக்கான இலவச அனுமதிகளும் வழங்கப்படவுள்ளன.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் 2009 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட சர்வதேச வர்த்தக கண்காட்சி வெற்றிகரமாக எட்டாவது தடவையாக யாழ்.மண்ணில் நடைபெறவுள்ளது.

இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சியினூடாக வடமாகாணத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும், உள்ளுர் உற்பத்தியாளர்களுக்கான சர்வதேச சந்தை வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுப்பதற்கான மிகப்பாரிய சந்தர்ப்பமாக இந்த சர்வதேச வர்த்தக கண்காட்சிகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

அதேவேளை, வர்த்தக கண்காட்சியினை பார்வையிடுவதற்கு இறுதி நாள் வரை காத்திருக்காது. ஆரம்ப நாட்களிலும் பொது மக்களை பார்வையிட்டு பயன்பெற்றுக்கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதுடன், சிறுவர்களுக்கான விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் இசை நிகழ்வுகள் என்பனவும் ஏற்பாடு செய்துள்ளனர்.

கடந்த காலங்களில் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்துக்கொண்டு தமது ஆதரவினை வழங்கியது போன்று இந்த வருடமும் நடைபெறவுள்ள எட்டாவது சர்வதேச வர்த்தக கண்காட்சியினை பார்வையிட்டு பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுத்த அதேநேரம், பொது மக்களின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் ஏற்பாட்டாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts