Ad Widget

மோடியின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வரவேற்கிறோம் – டக்ளஸ்

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தை வலுப்படுத்தி அதை அடித்தளமாகக் கொண்டு நிரந்தர அரசியல் தீர்வு நோக்கிச் செல்ல வேண்டும் என்று இந்திய பிரதமரை சந்தித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருப்பதை ஈ.பி.டி.பி வரவேற்கின்றது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

KN-daklas

இது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சிறு கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து எழுதியுள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையில் தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வை பெற்றுக் கொள்வதற்கு அரசியல் அமைப்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வை நோக்கி முன்னகர்வதற்கு இருக்கக்கூடிய ஒரே வழிமுறையாக 13ஆவது திருத்தத்தச் சட்டத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னகர்வதுதான்.

இதையே நாங்கள் கடந்த இருபது வருடங்களுக்கு மேலாக மாறி மாறி ஆட்சிக்கு வந்த இலங்கை அரசுகளிடமும், தமிழ் மக்களிடமும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

ஆனால் உங்களைச் சந்தித்த கூட்டமைப்பினரோ 13ஆவது திருத்தத்தை அர்த்தமற்றது என்றும் அதை அமுல்படுத்தி தீர்வொன்றை நோக்கிச் செல்ல முடியாது என்றும் கூறிவருகின்றார்கள்.

இந்த நிலையில் இன்று அவர்களுடனான சந்திப்பில் 13ஆவது திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அரசியல் தீர்வை கட்டியெழுப்ப வேண்டும் என்றும் இலங்கையில் உள்ள அனைத்துத் தரப்பினருடனும் கூட்டுறவாக செயற்பட்டு பிரச்சினைக்கு தீர்வு காண உழைக்க வேண்டும் என்று நீங்கள் கூறியிருப்பதை மகிழ்ச்சியோடு வரவேற்கின்றேன்.

அதேபோல், இலங்கையில் குறிப்பாக வடக்கு கிழக்கில் இந்திய அரசால் முன்னெடுக்கப்படும் உதவிகளை தொடருவதாகவும் இவ்விவகாரங்களில் இந்திய அரசு தவறாமல் கரிசனையோடு செயற்படும் என்றும் இலங்கையில் தமிழ் மக்கள் நீதி, பாதுகாப்பு, சமத்துவம் பெற்று வாழ வேண்டும் என்றும் நீங்கள் கூறியிருப்பது கண்டு பெருமகிழ்ச்சியடைகின்றேன்.

உங்களது வார்த்தைகள் தமிழ் மக்களுக்கு நிச்சயம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என நம்புகின்றேன். உங்களின் பெறுமதிமிக்க ஆலோசனைகளை கூட்டமைப்பினர் சிரமேற்று செயற்பட வேண்டும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டியுள்ளது என்று’ அந்தக் கடிதத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

Related Posts