காணாமல் போனவர்களை மீட்டுத்தரக் கோரியும் ஐ.நா நீதியான விசாரணை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் நல்லூர் ஆலய முன்றலில் கடந்த மூன்று நாள்களாக மேற்கொள்ளப்பட்ட உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகலுடன் முடிவடைந்தது.
கடந்த மூன்று நாள்களாக இடம்பெற்று வந்த சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்புப் போராட்டம் இன்று பிற்பகல் நீராகாரத்துடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
இதேவேளை , கடந்த 5ஆம் திகதி இளைஞர் அணியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்காலில் இருந்து நீதி கோரி ஆரம்பிக்கப்பட்ட நடைபவனியும் இன்று பிற்பகல் நல்லூர் முன்றலை வந்தடைந்தது.
அவர்களது வருகையினைத் தொடர்ந்து நீராகாரம் வழங்கப்பட்டு போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
இதன்போது காணாமல் போனவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து நீதி வேண்டும் என்று வலியுறுத்தி மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு பல்வேறு அமைப்புக்களும், பல்கலைக்கழக சமூகம் , தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி ஆகியன ஆதரவினை வழங்கியிருந்தன. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரனும் கலந்து கொண்டு ஆதரவினை வழங்கியிருந்தார்.