Ad Widget

மூன்று தொழிற்சாலைகளுக்கு அடிக்கல்

அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் மூன்று தனியார் தொழிற்சாலைகளுக்கான அடிக்கற்கள் நாட்டப்பட்டன. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக நிர்மாணிக்கப்பட்டு வரும் அச்சுவேலி கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் மூன்று தனியார் தொழிற்சாலைகளுக்கான அடிக்கற்கள் நேற்றைய தினம் நாட்டிவைக்கப்பட்டன.

achchuvely

இதன்பிரகாரம் விவசாய நடவடிக்கை களுக்கான யூனியன் என்ரபிறைஸ் பிளாஸ்ரிக் குழாய் தொழிற்சாலைக்கானதும், மீன் பிடி வலை மற்றும் அதுசார்ந்த தொழிற் சாலையான மல்வா தொழிற்சாலைக்கானதும், இவற்றுடன் ஜாம், நெல்லிகிறஸ் மற்றும் பப்படம் ஆகியவற்றின் உற்பத்திகளை முன்னெடுக்கும் வகையில் ஹேமா இன்டஸ்றீஸ் தொழிற் சாலைக்கானதுமான அடிக்கற்களே நாட்டி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வுகளில் அடிக்கற்களை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ சந்திரசிறி, இந்திய துணைத் தூதுவர் மகாலிங்கம் உள்ளிட்டோர் நாட்டி வைத்தனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக அச்சுவேலி கைத்தொழிற் பேட்டையானது இந்திய அரசின் 225 மில்லியன் ரூபா நிதி உதவியுடனும், இலங்கை அரசின் 50 மில்லியன் ரூபா நிதி உதவியுடனும் உட்கட்டுமானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், நேற்றய தினம் மூன்று தனியார் தொழிற்சாலைகளுக்கான அடிக்கற்கள் நாட்டி வைக்கப்பட்டன.

கைத்தொழிற்பேட்டை வளாகத்தில் குறித்த மூன்று தொழிற்சாலைகளுக்குமான அடிக்கற்கள் முதற்கட்டமாக நாட்டி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய தொழிற் சாலைகளுக்கான அடிக்கற்கள் விரைவில் நாட்டி வைக்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே தொழிற்துறை முதலீட்டாளர்களுடன் அமைச்சர், ஆளுநர் மற்றும் இந்தியத் துணைத்தூதுவர் உள்ளிட்டோர் கலந்துரையாடி அவர்களது தேவைகள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கேட்டறிந்து கொண்டனர்.

இதன்போது, வலி.கிழக்கு பிரதேச செயலர் பிரதீபன், கைத்தொழில் அபிவிருத்தி சபையின் பிரதிப் பணிப்பாளர் சிவகெங்காதரன், சம்பத் வங்கியின் பிராந்திய முகாமையாளர் சங்கர், ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா, அமைச்சரின் யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி குகேந்திரன், ஈ.பி.டி.பியின் கோப்பாய் பிரதேச இணைப்பாளர் ஐங்கரன் ஆகியோருடன் குறித்த தொழிற்சாலைகளின் முதலீட்டாளர்களான பரராஜசிங்கம், காண்டீபன், சுரேஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Posts