Ad Widget

முளாயில் சுவரிற்கு நடுவில் துப்பாக்கி மீட்பு

AK47-gunsமூளாய் கிழக்கிலிலுள்ள வீடொன்றின் சுவாமி அறையில் மேலதிக சுவர் ஒன்று எழுப்பப்பட்டு, அதன் நடுவே மறைத்து வைக்கப்பட்டிருந்த ஏ.கே 47 ரக துப்பாக்கியொன்றினை மீட்டதாகப் வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்தனர்.

பாலசுப்பிரமணியம் சுந்தரேஸ்வரி (65) என்பவரது வீட்டிலிருந்தே மேற்படி ஆயுதம் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் கூறினார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த வீட்டில் திருத்த வேலைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன. இதன்போது வீட்டின் கூரைப்பகுதியினுடாக வெளவால்கள் பறந்து செல்வதை அவதானித்த வேலையாட்கள், கூரைக்கு மேலே ஏறி கீழ்த்தளக்கூரைக்குள் இறங்கிப் பார்த்த போதே, இந்த வீட்டின் சுவாமி அறையையும் அருகில் இருந்த அறையையும் பிரிக்கும் சுவருக்கு மூன்று அடி இடைவெளியில் சுவாமி அறைக்குள் இன்னொரு சுவர் அமைக்கப்பட்டு அதற்குள் ஏ.கே.47 வகையைச் சேர்ந்த துப்பாக்கியொன்று மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில், மூளாய் கிராம சேவையாளருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

கிராமசேவையாளர் இது தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்கு அறிவித்ததைத் தொடர்ந்து குறித்த துப்பாக்கியினை மீட்கும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக வீட்டில் வசித்த வந்த சுந்தரேஸ்வரி பொலிஸாருக்குத் தெரிவிக்கையில்,

‘எனது கணவர் இறந்த பின்னர் நானும் சித்த சுவாதீனமற்ற எனது மகளும் இந்த வீட்டில் வசித்து வந்தோம். கடந்த 1995ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக யாழ். மாவட்டத்தை விட்டு மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்த போது, நாங்களும் இடம்பெயர்ந்திருந்தோம். இதற்கிடையில் இந்த வீட்டில் யார் வசித்தார்கள் என்பது எனக்குத் தெரியாது’ என்று தெரிவித்தார். அத்துடன், தனது மகளும் சிறிது காலத்திற்கு முன்னர் இறந்து விட்டதாகவும் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related Posts