Ad Widget

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் அச்சநிலையிலேயே வாழ்கின்றனர்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் இராணுவத்தினர் அளவுக்கு அதிகமாக காணப்படுவதால் பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொடர்ந்தும் அச்சத்தின் மத்தியிலேயே வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட பெண் தலைமைத்துவம் தாங்கும் பெண்களின் பிரதிநிதி கதிர்செல்வம் கருணாநிதி தெரிவித்தார்.

பெண் தலைமைத்துவக் குடும்பங்களை வலுப்படுத்தல், நல்லிணக்க வழிமுறையின் முன்னேற்றப் பாதை, பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான தேசிய மாநாடு ரில்கோ ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பெண் தலைமைத்துவத்தின் பாதுகாப்பு என்ற தலைப்பில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது:

முல்லைத்தீவு மாவட்டத்தில் பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான நிரந்தர வீடுகள் இல்லை. இப்போதும் பல குடும்பங்கள் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றன. ஐந்து பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் ஒரு பெண் தலைமைத்துவக் குடும்பம் பாதுகாப்பு அற்ற நிலையிலேயே வாழ்ந்து வருகின்றது. திட்ட அடிப்படையில் கொடுக்கப்பட்ட வீடுகளும் முழுமையாக முடியாமல் கதவுகள், யன்னல் அமைக்கப்படாமல் காணப்படுகின்றன.

பாதுகாப்பு தரவேண்டிய பொலிஸ் நிலையங்களுக்குச் சென்று வருகின்றபோது பாலியல் அச்சுறுத்தல் ஏற்படுகின்றது. இரவு வேளைகளில் தொலைபேசிகளுக்கு அழைப்பெடுப்பது, மோட்டார் சைக்கிள்களில் செல்லும்போது பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் என்றவுடன் மறிப்பது என்று பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றோம். பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் எல்லாம் ஒரு பாதுகாப்பற்ற ஒரு சூழலுக்குள் தள்ளப்பட்டுள்ளதாகவே நாங்கள் உணர்கின்றோம். பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலையைக் கருத்தில் சிந்தித்து செயற்படவேண்டும் – என்றார்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய யாழ். மாவட்டச் செயலகத் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி இ.மோகனேஸ்வரன், சுகாதாரப் பிரச்சினை, பாதுகாப்புப் பிரச்சினையை பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் யாழ்ப்பாணத்திலும் எதிர்கொள்கின்றார்கள்.

இங்குள்ள தேச வழமைச் சட்டம், கண்டியச் சட்டம், முஸ்லிம் சட்டம் என்பவற்றில் பெண்களுக்குச் சரியான – சமமான உரித்துக்கள் – உரிமைகள் வழங்கப்படவில்லை.

சமூக ரீதியில் பெண்களுக்கு வாழாவெட்டி, கைம்பெண் என்று அழைக்கப்படுவதால் பெண்கள் மன ரீதியில் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகின்ற பெண்களை வளர்த்தெடுத்து அவர்கள் ஆற்றலை மேம்படுத்தவேண்டும். அவர்களின் வாழ்வாதாரத்து க்கான வழிவகைகளை நாங்கள் அனைவரும் முன்னெடுக்க வேண்டும் – என்றார்

Related Posts