Ad Widget

முல்லைத்தீவில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேர் கைது

முல்லைத்தீவு – முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மதவாளசிங்கன் குளம் காட்டுப்பகுதியில் உள்ள நாகஞ்சோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்துள்ளார்கள்.

நாகஞ்சசோலைப்பகுதியில் புதையல் தோண்ட முற்படுவதாக முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, நேற்று (05.06.2023) அதிகாலை அங்கு சென்ற அதிரடிப்படையினர் புதையல் தோண்ட முற்பட்ட 8 பேரையும் கைது செய்துள்ளனர்.

மேலும் புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய ஸ்கானர் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களையும் மீட்டுள்ளார்கள்.

முள்ளியவளை கணுக்கேணியினை சேர்ந்த ஒருவரும் பூதன்வயல் பகுதியினை சேர்ந்த ஒருவரும் மற்றும் நொச்சியாகம, ராஜாங்கனை, சாலிய அசோகபுர, அம்பலாந்தோட்டை, தபுத்தேகம பகுதிகளை சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள இராணுவ பிரிவில் பணியாற்றும் இராணுவத்தினர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் சிறப்பு அதிரடிப்படையினர் முள்ளியவளை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

முள்ளியவளை பொலிஸார் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related Posts