Ad Widget

முப்படைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை தமிழ் பேசும் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது- ஈ.பி.டி.பி

முப்படைகளுக்கு பொலிஸ் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை தமிழ் பேசும் மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளதாக ஈ.பி.டி.பி கட்சி தெரிவித்துள்ளது.     முப்படைகளுக்கு பொலிசாருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக கடந்த 2ஆம் திகதி வர்த்தமானியில் அறிவித்தல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் ஈ.பி.டி.பி கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அறிக்கை ஒன்றினை ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.   குறித்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறப்பட்டுள்ளது. மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,    யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போதிலும், இந்தநாட்டில் வடக்கு மற்றும் தென்பகுதி மக்களிடையே தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளதாக சுதந்திர தின உரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

ஜனாதிபதியின் கருத்தை ஈ.பி.டி.பி வரவேற்கின்றது. இந்தநிலையில், முப்படைகளுக்கு பொலிஸாருக்குரிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கும் நடவடிக்கையானது எமது மக்களிடையே அச்சத்தையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.   இதனால் தேசிய நல்லிணக்கம் குறித்து கேள்விகள் எழுகின்றன. இனங்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த சந்தேகங்கள் அகன்று, பரஸ்பர நம்பிக்கைகள் வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில் உரிமைக்குக் குரல் கொடுத்து உறவுக்குக் கரம் கொடுத்தே எமது செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டு வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதை நாம்  வலியுறுத்தி வருகின்றோம்.   மேலும் சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீட்டினை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை கடந்த காலங்களில் நாம் சுமுகப் பேச்சுவார்த்தைகளின் மூலம் முன்னெடுத்திருந்தோம்.

இதன்பிரகாரம் சிவில் நிர்வாகத்தில் படைகளின் தலையீடுகளைப் படிப்படியாக குறைத்து, இறுதியில் முற்றாக அதனை அகற்றும் நிலையை உருவாக்கி வந்திருந்தோம்.    தமிழ் பேசும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை நோக்கிப் படிப்படியாக முன்னேறி வரும் நிலையில், பொலிசாருக்கு உரிய அதிகாரங்கள் முப்படைகளுக்கும் வழங்கியிருப்பதானது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எனவே, தேசிய நல்லிணக்கத்தின்பால் தமிழ் பேசும் மக்களும் சுயமாக ஈர்க்கப்படக் கூடியதான முயற்சிகளையே அரசு மேற்கொள்ள வேண்டிய நிலையில், தமிழ் பேசும் மக்களிடையே தற்போது ஏற்பட்டிருக்கும் அச்சத்தையும், பீதியையும் போக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts