Ad Widget

முன்னாள் போராளிகள் அமைப்பு தங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யவேண்டும்

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் கலந்து செயற்பட எண்ணியதை தமிழர் விடுதலைக் கூட்டணி மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்கின்றது.

அவர்களின் பெயரைப் பயன்படுத்தி நாடாளுமன்றம் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், முன்னாள் போராளிகளின் அமைப்பிற்கு ஓர் இடத்தையாவது வழங்க மறுத்தது வருந்தத்தக்க விடயம் மட்டுமல்ல கண்டிக்கத் தக்கதுமாகும்.

ஏன் இன்றும் த.தே.கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஒரு சிலர் அவர்களின் பெயரை உச்சரித்தே தங்களின் நாடாளுமன்ற பதவியின் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளவிரும்புகின்றனர். எம்மைப் பொறுத்தளவில் அவர்கள் சுயேட்சையாகப் போட்டியிடுவது எதிர் காலத்தில் அவர்களின் தனிப்பட்ட வாழக்கையில் பலபிரச்சினைகளை எதிர்நோக்கவேண்டிவரும் என நாம் எண்ணுகின்றோம்.

எனவே அவர்கள் தங்களது முடிவை மீளப் பரிசீலனை செய்து எம்முடன் இணைய விரும்பாவிட்டால், ஏதாவது ஒரு பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சியில் இணைந்துபோட்டியிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். தங்களுக்கு போட்டியாக எவரும் செயற்பட்டால் அவர்களை துரோகிகள் அல்லது இராணுவப் புலனாய்வார்கள் எனக் கூறுவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு கை வந்தகலை என்பது மட்டுமல்ல புலிகளையும் போர்க் குற்றங்களுக்காக சர்வதேச விசாரணைகளுக்கு உட்படுத்தவேண்டும் என்று கூறியவர்கள் அல்லவா அவர்கள். இவைகள் அனைத்தையும் முன்னாள் போராளிகள் சிந்தித்துச் செயற்படவேண்டிய தருணம் இது.

முன்னாள் போராளிகளுக்காக தமிழர் விடுதலைக் கூட்டணியின் கதவுகள் என்றும் திறந்தே இருக்கும். – என்று ஆனந்தசங்கரி அவர்களால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts