முன்னாள் அமைச்சரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்சவின் மனைவி நேற்று(22) பிற்பகல் குற்றப்புலனாய்வு துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சட்டவிரோதமான கடவுச் சீட்டை வைத்திருந்தார் என்ற குற்றச் சாட்டின் பேரில் நேற்று பிற்பகல் மாலம்பேயிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது பற்றி பொலிஸ் சிரேஷ்ட அத்தியகட்சரும் பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோகண தெரிவிக்கும் போது, முன்னாள் அமைச்சரான விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்சவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுக்களும் குற்றப்புலனாய்வுத்துறையினரால் சேகரிக்கப்பட்டுள்ளது.
தனது இராஜதந்திர கடவுச்சீட்டில் போலியான தகவல்களை வழங்கியதாக இவர் மீது குற்றம்சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள அவர் மீது சட்டரீதியாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுமெனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இதற்கு முன்னரான காலத்தில் ஏன் கைது செய்யப்படவில்லை என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் உத்தியோகத்தர் , இது தொடர்பில் பொலிஸார் தகவல்களை அறிந்த போதும் போதிய ஆதாரங்களோ சாட்சியங்களோ காணப்படவில்லை. தற்போது குற்றப்புலனாய்வுப்பிரிவினரால் தகவல்கள் ஆதாரங்களுடன் கைப்பற்றப்பட்டு விட்டது எனவே கைது செய்வதற்கான சரியான தருணம் இதுவேயாகும் என தெரிவித்தார்.