Ad Widget

முதலமைச்சர் தனது பதவியைத் துறக்கவேண்டும் : சி.தவராசா

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தனது பதவியைத் துறக்கவேண்டும் என வடக்கு மாகாண எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா வலியுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கியது சட்டரீதியற்றதென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே தவராசா மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்,

“முதலமைச்சரால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழுவானது, இரு அமைச்சர்களை மட்டும் பதவி விலகக் கோருமாறு கடந்த வருடம் பரிந்துரைத்திருந்தது. எனினும் முதலமைச்சர் தன்னிச்சையாக ஏனைய இரண்டு அமைச்சர்களையும் பதவி விலகுமாறு கோரியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் அப்போதைய அமைச்சர் பா.டெனீஸ்வரனை பதவியிலிருந்து நீக்கியிருந்தார். இந்த நடவடிக்கை சட்டத்துக்கு முரணானது என அப்போதே எங்கள் எல்லோருக்கும் தெரிந்த விடயம். இதனால் முதலமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிராக மாகாண சபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

அமைச்சர் பதவியிலிருக்க அவருக்கு தடை விதித்தமை தவறு என்றும் டெனீஸ்வரனை தொடர்ந்து அமைச்சராக இருக்க வழிவகுத்துக் கொடுக்கும்படியும் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று கட்டளையிட்டுள்ளது.

இவ்வாறு மாகாண சபையின் சட்ட எல்லை வரம்புகள் என்னவென்று தெரியாமல்தான் முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதவியிலிருக்கிறார். அவர் எல்லையை மீறிய விடயங்களையும் பேசுவார், எல்லைக்குட்பட்ட விடயங்களையும் நடைமுறைப்படுத்தத் தெரியாது.

இந்நிலையில் இந்தத் தீர்ப்பை கௌரவமாக ஏற்றுக்கொண்டு முதலமைச்சர் தார்மீக ரீதியாக தனது பதவியிலிருந்து விலகவேண்டும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts