Ad Widget

முதலமைச்சர் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கத் தயாரா?: வட.மாகாணசபை உறுப்பினர்கள் கேள்வி!

வட.மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பதற்குச் சட்டரீதியான நடவடிக்கைகள் எதனையும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் எடுக்கவில்லை என வட.மாகாணசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

வட.மாகாணசபையின் 119ஆவது அமர்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) பேரவைச் செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனிடம் வாய்மொழி வினா ஒன்றை எழுப்பியிருந்தார்.

அதில் முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்து அவர்களைப் பதவி நீக்கிய முதலமைச்சர் அவர்கள் செய்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க எடுத்துள்ள மேலதிக நடவடிக்கை என்ன எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் அமைச்சர் சபையை மாற்றுவதற்காகவே விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தற்போது அமைச்சர் சபை மாற்றப்பட்டுள்ளதால் மேலதிக நடவடிக்கை தேவையற்றது எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, இவ்விடயம் தொடர்பாக சபையில் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த முன்னாள் சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம், ‘எங்களை குற்றஞ்சாட்டி குற்றவாளிகளாக்கி வெளியில் விட்டவர்கள் எங்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

மக்களுடைய பணம் ஒரு ரூபாய் கூட களவாடாமல், எனக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் தண்டணை அனுபவிக்க நான் தயாராக இல்லை. எனவே எந்த விசாரணைக்கும் நான் தயார்.

முதலமைச்சர் நியமித்த விசாரணை குழுவே என்னை குற்றமற்றவன் எனவும் என்னுடைய செயற்பாட்டுக்கு மாகாணசபை ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனத் தெரிவித்துள்ள நிலையில் என் மீது நடவடிக்கை எடுத்துள்ளீர்கள். ஆகவே அக்குற்றச் சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகள் நடத்தப்படவேண்டும்’ எனச் சபையில் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related Posts