Ad Widget

முக்கொலைச் சந்தேகநபருக்கு விளக்கமறியல் நீடிப்பு

அச்சுவேலி கதிரிப்பாயில் மே மாதம் 4ஆம் திகதி இடம்பெற்ற முக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஜோய் மகிழ் மகாதேவா, நேற்று உத்தரவிட்டார்.

யாழ். அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன் மற்றும் மகள் மூவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.

அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

நிக்குநானந்தன் அருள்நாயகி (50), யாசோதரன் மதுசா (27), நிக்குநானந்தன் சுபாங்கன் (19) ஆகிய மூவரும் பலியாகியிருந்ததுடன், தனஞ்செயன் தர்மிகா (25), க.யசோதரன் (30) ஆகிய இருவரும் படுகாயமடைந்திருந்தனர்.

இக் கொலை தொடர்பில் படுகாயமடைந்த தர்மிகாவின் கணவரான பொ.தனஞ்செயன் ஊரெழு பகுதியில் வைத்து கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அச்சுவேலிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

இந்த சம்வத்தில் பலியாகிய தர்மிகாவின் சகோதாரியான மதுசாவை இரண்டாவதாகத் திருமணம் செய்ய முடியாத நிலையிலே குறித்த நபர் (தர்மிகாவின் கணவர்) மேற்படி படுகொலையைச் செய்திருந்தார்.

ஏற்கெனவே, கொலையுண்ட மதுசாவின் கணவன் யசோதரன், கொலையாளியான தனஞ்செயனின் மனைவி தர்மிகா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகி தாங்கள் கொலைகளை நேரில் கண்டதாகச் சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்மன் நோய்யால் பாதிக்கப்பட்டிருந்த முக்கொலைச் சந்தேகநபர் கடந்த 1 ஆம் திகதி வழக்கு விசாரணை இடம்பெற்ற போது,கலந்துகொண்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts