Ad Widget

மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு வடக்கு முதல்வருக்கு உத்தரவு

வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்ரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

வட மாகாண முன்னாள் அமைச்சர் டெனிஸ்வரன், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ள நிலையில் அவர் நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையில், அது குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்த வடக்கு முதல்வர் அவர்களைப் பதவி நீக்க நடவடிக்கை எடுத்தார்.

இதற்கமைய, வடக்கு மாகாணசபையின் அமைச்சர்கள் பதவி நீக்கப்பட்டு, புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

இதனையடுத்து முதலமைச்சரின் தீர்மானத்தை ரத்துச் செய்யும் உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி டெனிஸ்வரன் மேன்முறையீடு செய்திருந்தார்.

அதன்படி டெனிஸ்வரனை அமைச்சர் பதவியிலிருந்து நீக்குவதற்கு விக்னேஸ்வரன் எடுத்த தீர்மானத்துக்கு தடை உத்தரவு பிறப்பித்து மீண்டும் அவருக்கு அந்தப் பதவியை வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தின் அந்த உத்தரவை செயற்படுத்தாமை காரணமாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் நீதிமன்றத்தை அவமதித்ததாக கூறி வடக்கு மாகாண முன்னாள் மீன்பிடித்துறை அமைச்சர் டெனிஸ்வரன் மீண்டும் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவிற்கு அமைய, சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் இரு அமைச்சர்களை இன்றைய தினம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு கடந்த ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, சி.வி.விக்னேஸ்வரன் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.

இதன்போது குறித்த மனு மீதான வழக்கை விசாரித்த நீதிபதி, எதிர்வரும் 18ஆம் திகதி முன்னிலையாகுமாறு விக்னேஸ்வரனுக்கு உத்தரவு பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார்.

Related Posts