Ad Widget

மிருகபலிக்கான தடை நீடிக்கும்

மிருகபலிக்கு தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியை தடுத்து நிறுத்துமாறு கோரி, இலங்கை சைவ மகா சபை, யாழ். மேல் நீதிமன்றத்தில் இவ்வருட ஆரம்பத்தில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தது.
குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில், ஆலயங்களில் மிருகபலி நடத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிப்பதாக யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், கடந்த ஏப்ரல் 1ஆம் திகதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த உத்தரவை இரத்துச் செய்து, வேள்வியை நடத்த அனுமதிக்குமாறு கோரி, கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலய நிர்வாகத்தினர், மல்லாகம் நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு, நேற்று செவ்வாய்க்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, யாழ். மேல்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது எனக்கூறிய நீதிவான், மிருகபலிக்கான அனுமதியையும் இரத்துச் செய்வதாக கூறினார்.

கருகம்பனை கவுணாவத்தை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் வருடாந்தம் ஜூன் மாதம் மிருக வேள்வி நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts