Ad Widget

மாவீரா் துயிலுமில்லத்தில நினைவுச் சமாதி அமைக்கும் பணி பொலிஸாரினால் இடைநிறுத்தம்

கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி அமைக்கும் பணி நேற்று வியாழக்கிழமை 05-01-2017 ஆரம்பிக்கப்பட்டிருந்தது. முற்பகல் மாவீரர் துயிலுமில்லத்தில் ஒன்று கூடிய மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் சிலர் இந்தப் பணியை முன்னெடுத்திருந்தனர்.

இந்த நிலையில் பிற்பகல் கனகபுரம் மாவீரர் துயிலுமில்லத்திற்கு சென்ற கரைச்சி பிரதேச சபையின் செயலலாளர் க. கம்சநாதன் தன்னுடைய அனுமதியின்றி சுடலையில் பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என உத்தரவிட்டிருந்தார்.

அதற்கு எதிர்ப்புத் தெரிவித்த உறவினர்கள் மற்றும் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் இது பிரதேச சபையின் உரிமைக்குட்பட்ட காணி அல்ல எனச் சுட்டிக்காட்டியதோடு இராணுவம் இவ்வளவு நாளும் இங்கு கட்டிடங்கள் அமைத்து இருந்த போது உங்களுடைய பிரதேச சபையும் சட்டங்களும் எங்கு போனது எனவும் கேள்வி எழுப்பி, தங்களது பணியை தொடா்ந்தும் முன்னெடுத்தனர்.

அரசியல் அழுத்தம் காரணமாகவே பொது நினைவுச் சின்னம் அமைக்கும் பணியை நிறுத்துவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தாம் கருதுவதாகவும், முள்ளம் தண்டு வடம் பாதிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மாவீரா் துயிலுமில்லத்திற்கு சென்று பொது நினைவு சமாதி அமைக்கும் பணியில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர்.

மாவீரர் துயிலுமில்ல காணியில் சட்டவிரோத பணிகள் இடம்பெறுகிறது என 119 தொலைபேசிக்கு அழைப்பு கிடைத்ததையடுத்து தாம் இங்கு வருகை தந்ததாகவும், பிரதேச சபை செயலாளர், பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரை அழைத்து பேசி தீர்வுக்கு வருவோம் எனக் கூறி சமாதி அமைக்கும் பணியை நிறுத்தியுள்ளனர்.

Related Posts