Ad Widget

மாவீரர் தினத்தை தேர்தல் தேவைக்காக பயன்படுத்த வேண்டாம்: முன்னாள் போராளி காக்கா அண்ணன்

”அரசியல் கட்சிகளினதும் அரசியல்வாதிகளினதும் தேர்தல் தேவைக்காக மாவீரர் தினத்தை பயன்படுத்தக் கூடாது. அதன் புனிதத்தை உணர்ந்து செயற்பட வேண்டும்” என முன்னாள் போராளியான காக்கா அண்ணன் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில், அது தொடர்பில் யாழ். ஊடக அமையத்தில் நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

யுத்தம் நிறைவடைவதற்கு முன்பாக, அதாவது கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் எந்த மனநிலையில் மாவீரர் துயிலும் இல்ல மண்ணை மிதித்துவிட்டு வெளியில் வந்தோமோ, அந்த மனநிலை இன்றும் பேணப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறிப்பாக ஊடகவியலாளர்களும் இவ்விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட வேண்டுமென குறிப்பிட்ட அவர், பிரதான சுடரை மாவீரரின் கணவன், மனைவி, பெற்றோர் அல்லது பிள்ளைகளே ஏற்ற வேண்டும் என்ற வேண்டுகோளையும் முன்வைத்தார்.

இதேவேளை, தமிழர் தேசத்தை பொறுத்தவரை ஒரேயொரு பிரபாகரன்தான் உள்ளார். ஆகவே அவரது நிலையில் யாரும் தம்மை வைத்து பார்ப்பதை அனுமதிக்க முடியாதென்றும் குறிப்பிட்டார்.

Banner

Related Posts