Ad Widget

மாநாட்டுக்கு வருகை தரும் நாடுகளின் தலைவர்களிடம் போர்க் குற்ற ஆவணத்தை கையளிக்கின்றது த.தே.கூட்டமைப்பு

mavai mp inகொழும்பில் நடைபெறும் பொதுநலவாய மாநாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளாதபோதும், இந்த மாநாட்டில் பங்குகொள்ள வருகை தரும் வெளிநாட்டுத் தலைவர்களை அது பிரத்தியேகமாகச் சந்தித்து பேச்சு நடத்தவுள்ளது.

இந்தப் பேச்சின்போது இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள், இறுதிப்போர்க் குற்றங்கள் ஆகியன தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவதுடன், இவை தொடர்பில் ஆவணம் ஒன்றையும் கூட்டமைப்பு அந்தத் தலைவர்களிடம் கையளிக்கவுள்ளது என்று அதன் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சித் தலைவர்களின் கூட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்றது. இதன்போது அடுத்த மாதம் கொழும்பில் இடம்பெறும் பொதுநலவாய மாநாட்டைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

“நாங்கள் இலங்கையில் நடக்கின்ற பொதுநலவாய மாநாட்டைத்தான் புறக்கணிக்கின்றோமே தவிர பொதுநலவாய அமைப்பை நாம் புறக்கணிக்கவில்லை” என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சேனாதிராசா தெரிவித்தார். “பொதுநலவாய மாநாட்டில் கூட்டமைப்பு கலந்துகொள்ளாத போதும், மாநாட்டுக்கு வருகை தரும் நாடுகளின் தலைவர்களை மாநாட்டுக்கு வெளியில் பிரத்தியேகமாகச் சந்தித்து இலங்கையில் இடம்பெற்றுள்ள மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையைக் கையளித்துச் சர்வதேச விசாரணையை வலியுறுத்துவோம். அத்துடன் மாநாட்டில் பங்குபற்றாத தலைவர்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைப்போம்” என்று மாவை சேனாதிராசா மேலும் கூறினார்.

Related Posts