மாநகர சபையின் மாண்பினைப் பேணும் வகையில் சபையில் எழுந்துநின்று கருத்துக்களை தெரிவிக்குமாறு யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் முன்னாள் மாநகர முதல்வரும் தற்போதைய உறுப்பினருமான யோகேஸ்வரி பற்குணராஜாவை இன்று (செவ்வாய்க்கிழமை) கேட்டுள்ளார்.
யாழ். மாநகர சபையின் 2ஆவது அமர்வானது யாழ். மாநகர சபை சபா மண்டபத்தில் முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் ஆரம்பமாகியபோதே இவ்வாறு கேட்டுள்ளார்.
கடந்த அமர்வின் கூட்ட அறிக்கை உறுப்பினர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டபோது, அவ்வறிக்கையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினரினால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களில் சில விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருக்கவில்லை. இது குறித்து சபையின் கவனத்திற்கு தெரிவித்த அவ்வுறுப்பினருக்கு ஆதரவாக முன்னாள் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தனது கருத்தினை இருக்கையில் அமர்ந்தவாறே தெரிவித்திருந்தார்.
காலில் சத்திரசிகிச்சை மேற்கொண்டமையினால் அதிக நேரம் எழுந்துநிற்க முடியாதென்றும், தனது மருத்துவ அறிக்கையினை சமர்ப்பிப்பதாகவும் முதல்வரிடம் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது, சபையில் மருத்துவ அறிக்கையினை முறையாக சமர்ப்பித்து முதல்வரின் அனுமதியை உரிய முறையில் பெற்ற பின்னர் இருக்கையில் அமர்ந்தவாறு கருத்துக்களை தெரிவிக்கலாம் என முதல்வர் சுட்டிக்காட்டினார்.