தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவராக கருதப்பட்ட மாத்தையா எனப்படும் கோபாலசுவாமி மகேந்திரராஜா இந்திய றோ உளவுப் பிரிவின் உளவாளி என தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, 1989ம் ஆண்டு முதல் மாத்தையா றோ உளவாளியாக கடமையாற்றியிருந்தார் என, இந்தியாவில் வெளியாகியுள்ள நூல் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர் நீனா கோபல் குறித்த நூலை எழுதியுள்ளார். பிரபாகரனை இல்லாதொழித்து புலிகளின் தலைமைப் பொறுப்பினை ஏற்றுக்கொள்ளுமாறு மாத்தையாவிற்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது எனவும், எனினும் மாத்தையா இந்திய றோ உளவுப் பிரிவிற்காக கடமையாற்றிய குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்டார் என்பது இந்திய புலனாய்வுப் பிரிவிற்கு தெரியாது எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
1993ம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல் பற்றிய விபரங்களை இந்தியாவிற்கு மாத்தையா வழங்கியதாகவும், இந்த கப்பல் தாக்குதலில் புலிகளின் முக்கிய உறுப்பினர் மற்றும் பிரபாகரனின் சிறு வயது தோழருமான கிட்டு உயிரிழந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மாத்தையாவை கைது செய்த தமிழீழ விடுதலைப் புலிகள் சில மாதங்களாக அவரை சித்திரவதை செய்ததோடு, 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ம் திகதி அவரை கொன்றதாகவும் அந்த நூலில் கூறப்பட்டுள்ளது..
மேலும், அவரது 257 சகாக்களையும் புலிகள் கொன்று சடலங்களை குழியொன்றில் இட்டு தீயிட்டுக் கொளுத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
றோ உளவுப் பிரிவிற்கு மேலதிகமாக இந்தியப் புலனாய்வுப் பிரிவினர் மற்றும் ஏனைய தரப்பினர் இராஜதந்திரிகள் போன்றவர்களும் வடக்கு, கிழக்கில் தகவல்களை திரட்டியதாக அந்த நூல் குறிப்பிடுகின்றது.
2009ம் ஆண்டில் இலங்கை அரசாங்கப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளை முற்றாக தோற்கடித்தனர் எனவும் இந்த யுத்தத்தின் போது பெரும் எண்ணிக்கையிலானவர்களின் பலியானதாகவும் அந்த நூலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.