மாணவி உயிரிழப்புக்கு பொலிஸாரின் அசமந்தப்போக்கே காரணம் – ரவிகரன்

முல்லைத்தீவு – கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருநாட்டுக்கேணி பகுதியில் இன்று (21) பாடசாலைக்கு அண்மையில் இடம்பெற்ற விபத்தில் மாணவியொருவர் உயிரிழந்துள்ள நிலையில், இந்த விபத்து இடம்பெறுவதற்கு கொக்கிளாய் பொலிஸாரின் அசமந்தப்போக்கே காரணமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கடுமையாகச் சாடியுள்ளதுடன், உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

குறிப்பாக, வீதி போக்குவரத்துப் பொலிஸார் பாடசாலைக்கு மாணவர்கள் செல்கையில், உரிய நேரத்துக்கு கடமைக்கு வராமை மற்றும் அதிவேகத்துடன் செல்லும் வாகனங்களின் வேகக் கட்டுப்பாடு குறித்து கொக்கிளாய் பொலிஸார் கவனம் செலுத்தாமையே இந்த விபத்து இடம்பெற காரணமாக அமைந்துள்ளதாகவும் ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் சில வருடங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்த விடயத்தையும் அவர் இதன்போது மேலும் சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

முல்லைத்தீவு – கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருநாட்டுக்கேணிப் பகுதியில் பாடசாலைக்கு அண்மையில் இன்று (21) இடம்பெற்ற விபத்தில் சிறுமியொருவர் உயிரிழந்தார்.

வீதியில் மிக வேகமாக வந்த தென்னிலங்கைப் பகுதியைச் சேர்ந்த மீன் ஏற்றும் வாகனம் சிறுமி மீது மோதியதில், சிறுமி 20 – 30 அடி வரையான தூரத்துக்கு வாகனத்தால் இழுத்துச் செல்லப்பட்ட பிற்பாடே வாகனம் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.

இந்தச் சம்பவம் பாடசாலைக்காக மாணவர்கள் செல்கின்ற காலை வேளையில் பாடசாலைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளது. இருப்பினும் இந்தப் பகுதியில் வீதிப் போக்குவரத்துப் பொலிஸார் எவரும் குறித்த நேரத்தில் கடமையில் ஈடுபட்டிருக்கவில்லை.

கொக்கிளாய் மற்றும் கருநாட்டுக்கேணிப் பகுதியிலிருந்து மீன் ஏற்றிச் செல்கின்ற வாகனங்கள் எப்போதும் வேகக் கட்டுப்பாடின்றி மிக வேகமாகச் செல்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொக்கிளாய் பொலிஸார் இது தொடர்பில் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை எனவும் மக்கள் முறையிடுகின்றனர்.

கடந்த சில வருடங்களுக்கு முன்பாகவும் இவ்வாறு மீன் ஏற்றிச்செல்கின்ற தென்னிலங்கைப் பகுதியைச் சேர்ந்த வாகனமொன்று கொக்குத்தொடுவாய் பாடசாலைக்கு அண்மையில் மாணவன் ஒருவன் மீது மோதியதில் அந்த மாணவன் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியிருந்தது.

அத்தோடு பாடசாலை தொடங்கும் நேரம், பாடசாலையிலிருந்து மாணவர்கள் வீடு செல்லும் நேரங்களில் வீதிப் போக்குவரத்து பொலிஸார் உரிய நேரத்துக்கு கடமைக்கு வருவதில்லை எனவும் அப்பகுதி மக்களால் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறாக தொடர்ச்சியாக கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் விபத்துச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன.

அதிலும் குறிப்பாக பாடசாலையை அண்மித்த பகுதிகளில் பாடசாலைக்கு மாணவர்கள் செல்கின்ற நேரத்தில் இவ்வாறான விபத்துக்கள் இடம்பெறுகின்றன.

அப்பகுதிப் பொலிஸாரின் அசமந்தப்போக்காலேயே இவ்வாறு தொடர்ச்சியாக மாணவர்கள் உயிரிழக்கின்ற நிலை ஏற்படுகிறது.

இந்த விடயத்தில் கொக்கிளாய் பொலிஸார் மீது அப்பகுதி மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கின்றனர். பொலிஸார் கையூட்டுக்களைப் பெற்றுக்கொண்டே இவ்விதமாக அசமந்தப்போக்குடன் செயற்படுகின்றார்கள் எனவும் மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர்.

இடம்பெற்ற இந்த விபத்துக்கும் மாணவியின் உயிரிழப்புக்கும் பொலிஸாரே முழு பொறுப்பு ஆவர். உரிய நேரத்தில் கடமையில் ஈடுபடாமையாலும், வேகக் கட்டுப்பாடின்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் அசமந்தப்போக்கோடு செயற்பட்டமையாலுமே இந்த விபத்தும் மாணவியின் மரணமும் நேர்ந்துள்ளது.

இவ்விடயங்களில் கொக்கிளாய் பொலிஸார் முறையாக செயற்படவேண்டும். விபத்தில் உயிரிழந்த மாணவிக்கு நீதி கிடைக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த விடயத்தில் பொலிஸாரின் அசமந்தப்போக்கான செயற்பாடு தொடர்பிலும், உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் உரிய தரப்பினரின் கவனத்துக்கு கொண்டுசெல்வேன் என்றார்.

Related Posts