Ad Widget

மாணவர்கள் ஒன்றியத் தலைவரை தாக்கியவர்களுக்கு பிணை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீட தமிழ் – சிங்கள மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதிலில் மாணவர் ஒன்றியத் தலைவரைத் தாக்கிய 4 மாணவர்களையும் தலா 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்தரன் அனுமதியளித்தார்.

கடந்த மாதம் 16ஆம் திகதி, யாழ். பல்கலைக்கழகத்தில் புதுமுக மாணவர்களை வரவேற்கும் நிகழ்வின் போது விஞ்ஞான பீட மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முரண்பாடாக மாறியது.

இதன்போது தாக்குதலுக்கு இலக்காகிய பெரும்பான்மையின மாணவர் தன்னைத் தாங்கியது பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் என அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் பல்கலைக்கழக மாணவர்ஒன்றியத்தலைவரை கைதுசெய்ய முயன்ற வேளை, மாணவர் ஒன்றியத் தலைவர் கடந்த ஜூலை மாதம் 20ஆம் திகதி நீதிமன்றில் சரணடைந்தார். இதன்போது, அவருக்கு பிணை வழங்கப்பட்டது.

இந்நிலையில் தன்னைத் தாக்கியவர்களைத் தனக்குத் தெரியும் எனக்கூறிய மாணவர் ஒன்றியத் தலைவர், அது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தார். அந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாக்கிய மாணவர்களுக்கு நேற்று மன்றில் ஆஜராகினர். அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.

மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கியதாகக் கூறப்படும் குற்றத்துக்கான சட்ட வைத்தியதிகாரி அறிக்கை மற்றும் குற்றப்பத்திரிகை என்பன தாக்கல் செய்யப்படவில்லை. ஆனால், மாணவர் ஒன்றியத் தலைவரின் முறைப்பாடு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இரண்டும் ஒரே விடயம் என்பதால், இரண்டையும் ஒரே தினத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக கூறிய நீதிவான், வழக்கை எதிர்வரும் நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Related Posts