காங்கேசன்துறை வீதியிலுள்ள மருந்தகமொன்றில் மதன மோதகம் என்னும் போதைப் பொருளை மாணவர்களுக்கு விற்பனை செய்த ஒருவரை வியாழக்கிழமை (02) கைது செய்ததாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
5ஆம் வட்டாரம் மண்கும்பான் பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய சந்தேகநபரே கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த கடைக்கு சென்ற பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 638 கிராம் நிறையுடைய மதனமோத உருண்டைகளை கைப்பற்றியதாக தெரிவித்த பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை கொழும்புத்துறை பகுதியில் பொலிஸாருக்கு கஞ்சா விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவரையும் வியாழக்கிழமை (02) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 20 கிராம் கஞ்சா மீட்கப்பட்டதுடன், கஞ்சா விற்பனை செய்து பெற்றுக்கொண்ட 3000 ரூபாய் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றினர்.
சந்தேகநபர், சிவில் உடையில் சென்ற பொலிஸாருக்கு 500 ரூபாய்க்கு கஞ்சாவை விற்பனை செய்துள்ளார்.