யாழ்ப்பாணம் அராலி பகுதியிலுள்ள கிணறு ஒன்றிலிருந்து கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் சடலமாக மீட்க்கப்பட்ட மாணவனது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து மாணவனது உறவினர்களால் யாழ் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 24 ஆம் திகதி அராலி கிழக்கு வாலையம்மன் கோவிலடியை சேர்ந்த 16 வயதுடைய ஜெயகாந்தன் டிஷாந்தன் எனும் மாணவன் அராலி தெற்கு மாவத்தை பகுதியில் உள்ள குடிநீர் கிணற்றுக்குள் இருந்து சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
இது தொடர்பாக விசாரனைகளை மேற்கொண்டிருந்த வட்டுக்கோட்டை பொலிஸார், மாணவனது குடும்பத்திற்கும் பிறிதொரு குடும்பத்திற்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்கம் காரணமாக மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்திருந்தனர்.
எனினும் மாணவன் தற்கொலை செய்து கொள்ளவில்லையெனவும், அவரது மரணத்தில் சந்தேகம் காணப்படுவதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
இது தொடர்பாக யாழ் மாவட்ட மனிதவுரிமை ஆணையாளர் கருத்து தெரிவிக்கையில், உறவினர்களால் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளதாகவும், சம்பவத்தை விசாரனை செய்த வட்டுக்கோட்டை பொலிஸாரிடமிருந்து விசாரனை அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதுடன் சட்ட வைத்திய அதிகாரியிடமும், சம்பவம் தொடர்பான பரிசோதனை அறிக்கையை கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.