Ad Widget

மாகாண சபை உறுப்பினர்களில், மூவர் வவுனியாவில் சத்தியப் பிரமாணம்

ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட மாகாணசபை உறுப்பினரும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் தம்பியுமான க.சர்வேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், வவுனியா மாவட்ட மாகாண சபை உறுப்பினர் எம்.தியாகராஜா ஆகிய மூவரும் இன்று புதன்கிழமை (16.10.13) வவுனியாவில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.

வவுனியா சட்டத்தரணி க.தயாபரன் இவர்களுக்கு சத்தியப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த வைபவத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் கட்சி முக்கியஸ்தர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

மற்றுமொரு வவுனியா மாவட்ட உறுப்பினராகிய இந்திரராஜா முதலமைச்சர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.

சத்தியப்பிரமாணம் செய்து கொள்வதில் தாமதம் ஏற்பட்டிருந்த போதிலும், எதிர்வரும் 25 ஆம் தேதி தனது முதல் அமர்வை நடத்தவுள்ள வடமாகாணசபையின் முதலாவது நடவடிக்கையில் இருந்து, மாகாணசபைக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள 30 பேரும் ஒன்றிணைந்து செயற்படுவார்கள் என்றும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனின் தலைமையில் அவர்களுக்கான வழிகாட்டலை கூட்டமைப்பு செய்யும் என்றும் இன்றைய பதவியேற்பு நிகழ்வில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

Related Posts